Published : 10 Feb 2024 06:58 AM
Last Updated : 10 Feb 2024 06:58 AM

முன்விரோதம் காரணமாக உத்தவ் தாக்கரே கட்சியின் முன்னாள் எம்எல்ஏ மகன் மும்பையில் சுட்டுக் கொலை

மும்பை: மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே (சிவசேனா) கட்சியின் முன்னாள் எம்எல்ஏ மகன் முன்விரோதம் காரணமாக சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சிதான் தற்போது உண்மையான சிவசேனா கட்சி என்று மாநிலத்தில் செயல்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி சிவசேனா-உத்தவ் பிரிவு என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா கட்சியின் முன்னாள் எம்எல்ஏவாக இருப்பவர் வினோத் கோசல்கர். இவரது மகன் அபிஷேக் கோசல்கர். இவரும் முன்னாள் கவுன்சிலர் ஆவார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அபிஷேக் மும்பை தகிசர் பகுதியில் உள்ள எம்எச்பி காலனி போலீஸ் நிலைய எல்லைக் குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு அலுவலகத்துக்கு வந் திருந்தார். அங்கு சமூக வலைதளமான ‘பேஸ்புக்' நேரலை விவாதத்தில் சமூகஆர்வலரான மோரிஸ் என்பவருடன் அபிஷேக் கோசல்கர் கலந்துகொண்டார்.

நேரலை முடிந்தநிலை யில் அவர் புறப்பட்ட நேரத்தில் மோரிஸ், திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அபிஷேக்கை நோக்கி சரமாரியாக சுட்டார். இதில் வயிறு, கழுத்து உள்பட உடலில் 3 இடங்களில் குண்டு பாய்ந்த அபிஷேக் கோசல்கர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.

இதைத் தொடர்ந்து மோரிஸும் அதே துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டார். இதைப்பார்த்து அங்கு இருந்த நபர்கள் 2 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், 2 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

முன்னாள் கவுன்சிலர் அபிஷேக்குக்கும், மோரிஸுக்கும் இடையே ஏற் கெனவே முன்விரோதம் இருந்ததாக தெரிகிறது. சமீபத்தில் இருவருக்கும் இடையே சமாதானம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில்தான் மோரிஸ் தனது அலுவலகத்தில் நடைபெற்ற புடவை வழங்கும் நிகழ்ச்சிக்காக அபிஷேக்கை அழைத்து வந்து திட்டமிட்டு சுட்டுக் கொன்றுள்ளார் என்பது போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x