Published : 10 Feb 2024 06:06 AM
Last Updated : 10 Feb 2024 06:06 AM

சென்னை விமான நிலையத்தில் ரூ.2.33 கோடி மதிப்புள்ள வைரக்கற்கள் பறிமுதல்: தாய்லாந்துக்கு கடத்த முயன்றவர் கைது

சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.2.33 கோடி மதிப்புள்ள வைரக்கற்கள்.

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.2.33 கோடி மதிப்புள்ள வைரக்கற்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதை தாய்லாந்துக்கு கடத்திச் செல்ல முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.

சென்னையில் இருந்து தாய்லாந்துக்கு விமானத்தில் வைரக் கற்கள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறை மற்றும் சுங்கத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்திய அதிகாரிகள், தாய்லாந்து செல்லும் பயணிகளையும், அவர்களின் உடமைகளையும் தீவிரமாக சோதனை செய்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று அதிகாலை 1.30 மணிக்கு சென்னையில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக் செல்லும் தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் புறப்படத் தயாரானது. அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளிடம் அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போதுசென்னையை சேர்ந்த 30 வயதுடைய ஆண் பயணி ஒருவர், சுற்றுலா பயணியாக தாய்லாந்து செல்ல வந்தார். அவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அவர் வைத்திருந்த கைப்பையை திறந்து சோதனை செய்தனர்.

அதற்குள் வைரக் கற்கள் இருந்தன. இதையடுத்து, அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர். அவர் உள்ளாடைக்குள் உயர்ரக வைரக் கற்களை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

அவரை கைது செய்து, அவரிடம் இருந்து ரூ.2.33 கோடி மதிப்புள்ள 1004 கேரட் வைரக் கற்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட நபரைசென்னை தியாகராய நகரில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x