Published : 09 Feb 2024 06:10 AM
Last Updated : 09 Feb 2024 06:10 AM

கணவரை பழிவாங்க மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக பொய் புகார்: பெண்ணுக்கு 5 ஆண்டு சிறை விதித்தது போக்சோ நீதிமன்றம்

சென்னை: கணவரை பழிவாங்கும் எண்ணத்தில் மகளை பாலியல் பலாத்காரம்செய்துவிட்டதாக கணவருக்கு எதிராகபொய் புகார் அளித்த மனைவிக்கு5 ஆண்டுகள் சிறை தண்டனைவிதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கம் ஷெனாய் நகர் பகுதியை சேர்ந்த 39 வயதானபெண் ஒருவர், தனியார் ஸ்கேன்சென்டரில் பணிபுரிந்து வந்துள்ளார். அவருக்கும், அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகாரணமாக, குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் இருந்து வருகிறது.

இந்நிலையில், கணவரை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில், தனது 14 வயது மகளை கணவரே பாலியல் வன்கொடுமை செய்து விட்டதாக கடந்த 2018-ம் ஆண்டு போலீஸில் அந்தப் பெண் புகார் அளித்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின்கீழ் அந்தப் பெண்ணின் கணவர்மீது கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

தனக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டை மனைவி சுமத்தியுள்ளதாகவும், அதனால், தனக்கு முன்ஜாமீன்வழங்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் கணவர் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கைவிசாரித்த உயர் நீதிமன்றம், பாதிக்கப்பட்ட சிறுமியை நேரில் அழைத்து விசாரித்தபோது, அவருக்கு எந்தவொருபாலியல் சம்பவமும் தந்தையால் நடைபெறவில்லை என்பது ஊர்ஜிதமானது.

அதையடுத்து, கணவருக்குஎதிராக பொய்யான பாலியல் குற்றச்சாட்டை சுமத்திய மனைவி மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்பேரில் கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸார், அந்த பெண்ணுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எம்,ராஜலட்சுமி முன்பாக நடந்தது.

போலீஸார்தரப்பில் ஆஜரான சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர் எஸ்.அனிதா, ‘‘தனது மகளின் கர்ப்பத்துக்கு கணவரே காரணம் என பொய்யான குற்றச்சாட்டை சுமத்திய பெண், அதை நிரூபிக்க தான் பணிபுரியும் ஸ்கேன் சென்டரில் வேறு ஒரு பெண்ணின் மருத்துவ அறிக்கையில் மகளின் பெயரை மாற்றி போலியான ஆவணங்களை தாக்கல் செய்துள்ளார்.

அவரது கணவர்எந்த குற்றச் செயலிலும் ஈடுபடவில்லை.மகளுக்கும் தந்தையால் பாலியல் ரீதியாக எந்தவொரு பாதிப்பும் இல்லை’’ என வாதிட்டார்.

அதையடுத்து நீதிபதி, ‘‘போக்சோ சட்டமே பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த சட்டத்தையே இந்த பெண் தவறாக பயன்படுத்தி கணவருக்கு எதிராக புகார் அளித்துள்ளார்.

மருத்துவ அறிக்கைகளையும் போலியாக தயாரித்து மோசடி செய்துள்ளார்.எனவே, குற்றம்சாட்டப்பட்ட பெண்ணுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.4 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. அத்துடன் இந்த வழக்கால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x