Published : 07 Feb 2024 06:12 AM
Last Updated : 07 Feb 2024 06:12 AM

போலி விவரம் உருவாக்கி நூதன பண மோசடி: சைபர் க்ரைம் போலீஸார் 6 மாதத்தில் 1,376 வழக்கு பதிவு

சென்னை: சைபர் க்ரைம் மோசடிகள் தொடர்பாக கடந்த 6 மாதங்களில் 1,376 வழக்குகளைபோலீஸார் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. இந்நிலையில் சைபர்குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மக்களை ஏமாற்ற புதுவகையான யுக்திகளை மோசடிக்காரர்கள் கையாள்கின்றனர்.

அண்மையில் ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட பல்வேறு துறை அரசு அதிகாரிகள் அல்லது தனிநபர் போல் போலியான சுய விவரங்களை உருவாக்கி மக்களை ஏமாற்றி நிதி உதவி பெற்று பண மோசடி செய்தனர்.

பெரும்பாலும், சமூக ஊடக கணக்குகள் அல்லது தனி நபர்கள் தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் பிற ஆன்லைன் தளங்களில் தனி நபர்களைப் பற்றிய தகவல்களைச் சேகரித்து அதை அடிப்படையாக வைத்து மோசடிகள் அரங்கேற்றப்பட்டன.

குறிப்பாக சேகரிக்கப்பட்ட தகவல்களைப் பயன்படுத்தி, சைபர் குற்றவாளிகள், பேஸ்புக், எக்ஸ், வாட்ஸ்-அப் போன்ற சமூக ஊடகத் தளங்களில் போலிசுய விவரங்களை நுட்பமாக உருவாக்கி சம்பந்தப்பட்டவர்களின் நட்பு வட்டாரத்தில் இருப்பவர்களைக் குறி வைத்து, அவசர உணர்வு உருவாக்கி பணம் பெற்று மோசடி செய்தனர்.

இது தொடர்பாக சைபர் க்ரைம் போலீஸார் கைது நடவடிக்கை எடுத்தாலும் மோசடிக்காரர்கள் முற்றிலும் கைது செய்யப்படவில்லை. தொடர்ந்து ஆங்காங்கே மோசடிகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

இது ஒருபுறம் இருக்க கடந்த 6 மாதங்களில் சைபர் க்ரைம் மோசடி தொடர்பாக தேசிய சைபர் க்ரைம் இணையதளத்தில் மொத்தம் 1,376 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

எனவே, பொதுமக்கள் மோசடிகளில் ஏமாறாமல் கவனமாக இருக்க வேண்டும் என சைபர் க்ரைம் போலீஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சைபர் க்ரைம்மோசடிக்கு யாரேனும் ஆளாகியிருந்தால், உடனடியாக கட்டணமில்லா உதவி எண் 1930-ஐ டயல் செய்து புகாரளிக்க வேண்டும்; அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலும் புகாரைப் பதிவு செய்யலாம் என போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x