Published : 01 Feb 2024 04:04 AM
Last Updated : 01 Feb 2024 04:04 AM

காளையார்கோவில் அருகே 5 பேரை தாக்கி கொள்ளையடித்த சம்பவம் - தனிப்படைகள் 8 ஆக அதிகரிப்பு

சிவகங்கை: காளையார்கோவில் அருகே 5 பேரை கொடூரமாக தாக்கி நகைகளை கொள்ளையடித்த சம்பவத்தில் இதுவரை குற்றவாளிகள் சிக்காததால் தனிப்படைகள் 6-ல் இருந்து 8 ஆக அதிகரிக்கப்பட்டன.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே கல்லு வழியைச் சேர்ந்தவர் ஜேக்கப் பாரி. வெளி நாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஜன.26-ம் தேதி அதிகாலை அவரது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மனைவி, மகன், மகள், தந்தை, தாயார் ஆகிய 5 பேரையும் ஒரு கும்பல் கொடூரமாகத் தாக்கி நகைகளை கொள்ளை அடித்தது. காயமடைந்த 5 பேரையும் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். காளையார் கோவில் போலீஸார் வழக்குப் பதிந்தனர்.

மாவட்ட எஸ்பி அரவிந்த் உத்தரவின் பேரில் 6 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். எனினும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களில் கொள்ளையர் நடமாட்டம் பதிவாகவில்லை. அதேபோல் அவர்கள் மொபைல் போன் போன்ற எந்த நவீன சாதனங்களையும் பயன்படுத்தவில்லை. விரல் ரேகை, அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள், வாகனங்கள் என எந்த தடயமும் கிடைக்கவில்லை. இதனால் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர்.

எந்த தடயமும் இல்லாமல் நடந்திருப்பதால், கல்லு வழி பகுதியை முழுமையாக அறிந்த நபர்கள் மூலமே இந்த கொள்ளை நடந்திருக்க வாய்ப்புள்ளதாக போலீஸார் கருது கின்றனர். இதனால் கல்லு வழியை சுற்றியுள்ள கிராமங்களில் நடமாடிய, தங்கியிருந்த நபர்கள், அப்பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர்கள் குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே விசாரணையை தீவிரப்படுத்தவும், நவீன முறையை கையாளவும் தனிப்படைகளின் எண்ணிக்கை 8 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x