Last Updated : 12 Jan, 2024 06:38 AM

 

Published : 12 Jan 2024 06:38 AM
Last Updated : 12 Jan 2024 06:38 AM

கோவாவில் மகனை கொன்ற பெண் சிஇஓ சிக்கியது எப்படி?

சுச்சானா சேத்

பெங்களூரு/பனாஜி: மேற்கு வங்கத்தை சேர்ந்தசுச்சானா சேத் (39) பெங்களூருவில் செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை (The Mindful AI Lab) தொடங்கி, அதன் தலைமை செயல்அதிகாரியாக உள்ளார். இவர் தனதுகணவர் வெங்கட் ராமனுடன் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து தனியாக வசித்தார். இந்நிலையில் சுச்சானா சேத், தனது 4 வயது மகனை கொன்ற வழக்கில் சிக்கியுள்ளார்.

இவர் போலீஸில் சிக்கியது எப்படி என கோவா விடுதி மேலாளரும் இவ்வழக்கின் புகார்தாரருமான ககன் கம்பீர் கூறியதாவது: சுச்சானா சேத் (39) கடந்த 6-ம் தேதி அதிகாலை பெங்களூருவில் இருந்து 4 வயது மகனுடன் எங்கள் விடுதிக்கு வந்தார். அவருக்கு அறை எண் 404-ஐ ஒதுக்கினோம்.

கடந்த 7ம் தேதி இரவு 10 மணிக்கு தனக்கு 2 பாட்டில் இருமல் மருந்து வேண்டும் என கேட்டார். அவர் குறிப்பிட்ட மருந்தை வாங்கி கொடுத்தோம். அந்த மருந்து குழந்தைகளுக்கு உரியது அல்ல. 8ம் தேதி இரவு 12.30 மணிக்கு, ‘எனக்கு பெங்களூருவில் அவசர வேலை இருக்கிறது. உடனடியாக அங்கு செல்ல வாடகை கார் வேண்டும்' என சுச்சானா கேட்டார்.

அதற்கு நான், ‘விமானம் மூலம் பெங்களூரு சென்றால் ரூ.5 ஆயிரம்தான் ஆகும். காரில் சென்றால் ரூ.30 ஆயிரம் வரை செலவாகும்.' என்றேன். ஆனால் அவர் விமான பயணம் தனக்கு ஒத்து வராது கார் தான் வேண்டும் என்றார். இதையடுத்து கார் ஏற்பாடு செய்து கொடுத்தேன்.

கடந்த 8ம் தேதி காலையில் அவர் அறையில் இருந்து கிளம்பியதும் விடுதி ஊழியர்கள் அறையை சுத்தம் செய்தனர். அப்போது அறையில் ரத்த கறை இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து விடுதியின் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தோம். அப்போது சுச்சானா சேத், தனது மகன் இல்லாமல் தனியாக வெளியேறியதை கண்டறிந்தோம்.

இதனால் ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் காலாகுட் காவல் ஆய்வாளர் நாயக்கை தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தோம். அவர் சுச்சானா சேத்தை போனில் தொடர்புகொண்டு மகன்குறித்து விசாரித்தார். அப்போது மகன் தனது நண்பரின் வீட்டில் இருப்பதாக கூறி, முகவரியை தெரிவித்தார். அந்த முகவரி, போலி முகவரி என்று தெரிந்தது.

இதையடுத்து காவல் ஆய்வாளர் நாயக், டாக்ஸி ஓட்டுநர் பிரதீப்குமாரை தொடர்பு கொண்டு கொங்கனியில் பேசினார். உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்துக்கு செல்லுமாறு கூறினார். அதன்பிறகே கர்நாடக போலீஸார் அவர் கொண்டுவந்த சூட்கேஸை பரிசோதனை செய்தனர். நாங்கள் நினைத்தபடியே, அந்த சூட்கேஸில் சிறுவனின் உடல் இருந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x