Published : 27 Dec 2023 05:30 AM
Last Updated : 27 Dec 2023 05:30 AM

மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினருக்கு கொலை மிரட்டல்: அதிமுக எம்எல்ஏ, மனைவி மீது வழக்கு பதிவு

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுக எம்எல்ஏமான்ராஜ், அவரது மனைவி மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள லட்சுமியாபுரத்தைச் சேர்ந்தவர் கணேசன் (45). அதிமுக பிரமுகரான இவர்,மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினராக உள்ளார். இவர் தனக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரி, வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரில் கூறியிருப்பதாவது: நான் விருதுநகர் மாவட்ட ஊராட்சிக் குழு (3-வது வார்டு) உறுப்பினராக உள்ளேன். எனது வார்டுக்குகடந்த 2 ஆண்டுகளாக நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. இதுகுறித்து மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டத்தில் தெரிவித்தேன். இதனால் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் வசந்தி மற்றும் அவரது கணவரும், ஸ்ரீவில்லிபுத்தூர் எம்எல்ஏ-வுமான மான்ராஜ் ஆகியோர் எனக்கு மிரட்டல் விடுத்து வந்தனர்.

கடந்த திங்கள்கிழமை என்னை செல்போனில் தொடர்புகொண்ட எம்எல்ஏ மான்ராஜ் "டிச. 28-ம் தேதி நடைபெற உள்ள மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டத்தில் நிதிஒதுக்கீடு செய்யவில்லை என்று பேசினால், கொலை செய்து விடுவேன்" என மிரட்டல் விடுத்தார். எனவே, எனக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும். எம்எல்ஏ மான்ராஜ், அவரது மனைவி வசந்திமீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தப் புகாரின் பேரில் மான்ராஜ், வசந்தி மீது கொலைமிரட்டல், ஆபாசமாகப் பேசுதல் ஆகிய பிரிவுகளின்கீழ் வன்னியம்பட்டி போலீஸார் வழக்கு பதிவுசெய்து, விசாரிக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x