Published : 23 Nov 2023 06:15 AM
Last Updated : 23 Nov 2023 06:15 AM

தரவுகள் திருட்டு குற்றச்சாட்டில் எனக்கு தொடர்பில்லை: மென்பொருள் நிறுவன பெண் ஊழியர் மறுப்பு

சென்னை: தனியார் மென்பொருள் நிறுவன தரவுகளை திருடியதாக தொடரப்பட்ட வழக்கில் தனக்கு தொடர்பில்லை என்று, குற்றம்சாட்டப்பட்ட பெண் மறுத்துள்ளார். சென்னை திருவல்லிக்கேணி யைச் சேர்ந்த தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் தரவுகளை திருடியதாக மத்திய குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக 2 பெண்கள் உட்பட 5 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி அவர்களைக் கைது செய்தனர். இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸார் அளித்த பத்திரிகை செய்தி ‘இந்து தமிழ் திசை‘ நாளிதழில் கடந்த 17-ம் தேதிபக்கம் 5-ல் வெளியாகி இருந்தது. இதுதொடர்பாக, அந்த நிறுவனத்தின் பெண் ஊழியரான, ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த காவ்யா வசந்த கிருஷ்ணன் தனது வழக்கறிஞர் மூலம் அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது:

நேர்மையான ஊழியர்: சாதாரண நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த நான் நிரபராதி. எனக்கும் நடந்த இணைய குற்றத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் பணியாற்றும் நிறுவனத்தின் நேர்மையான பணி சிரத்தையுள்ள ஊழியர். வெளிவந்துள்ள குற்றத்துக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. சென்னை உயர்நீதிமன்றத்தின் 2022-ம் ஆண்டு உத்தரவுப்படி, விசாரணை நிலுவையில் உள்ள ஒரு குற்ற வழக்கின் விவரங்களை வெளியிடுவதற்கு போலீ ஸாருக்கு அதிகாரம் இல்லை.

போலீஸ் நடவடிக்கைக்குப் பின், நவ.16-ம் தேதியே முதன்மை குற்றவியல் நீதிபதி உத்தரவின் பேரில் நான் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு விட்டேன் என்ற விவரம் செய்தியில் குறிப்பிடப்படவில்லை. புகார் தெரிவித்த நிறுவனத்தின் இணை நிறுவனர் ஒரு ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்தவர் என்ற விவரமும் செய்தியில் தவிர்க்கப்பட்டுள்ளது. இது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரால் விசாரணையில் இருந்துவரும் ஒரு வழக்கு. விசாரணையில் இருந்துவரும் ஒரு வழக்கைப் பற்றிய விவரங்களை வெளியிடுவது சட்டத்துக்கு முரணானது. இவ்வாறு அவர் அளித்துள்ள விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x