Published : 22 Nov 2023 06:32 AM
Last Updated : 22 Nov 2023 06:32 AM

நந்தனம் தனியார் பாரில் நடந்தது என்ன? - பின்னணி தகவல்கள் வெளியானது

சென்னை: சென்னை நந்தனத்தில் உள்ள தனியார் பாரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்வு குறித்த முழுபின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னை நந்தனத்தில் உள்ள தனியார் பார் (மதுபானக் கூடம்) ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் அதிகளவில் இளம் பெண்களும், இளைஞர்களும் மது குடித்துவிட்டு ஆட்டம் போட்டதாகச் செய்திவெளியானது. மேலும், சம்பந்தப்பட்ட இளம்பெண்கள் மற்றும் இளைஞர்கள் மது பாரிலிருந்து வெளியேறும்போது அதை அத்துமீறி சிலர்படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த வீடியோக்கள் வைரலானது. இப்படி வீடியோ வெளியிடுவது அத்துமீறல் எனவும், தனிமனித உரிமையைப் பறிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்நிலையில், சம்பவத்தன்று இரவு பாரில் நடந்தது என்ன என்பது குறித்து சம்பந்தப்பட்ட தனியார் பார் நிர்வாகி கூறியதாவது: கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் மதுக்கூடத்தை வழக்கம்போல் மூட தயாரானோம். அப்போது,அங்கு 6 பேர் கொண்டகும்பல் வந்தது. நேரம் முடிந்துவிட்டதால் உள்ளே செல்ல அனுமதி இல்லை என்று அவர்களிடம் தெரிவித்தோம். ஆனால், அவர்கள் அதைக் கேட்காமல் அத்துமீறி உள்ளே நுழைய முற்பட்டனர். இதனால், நாங்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தி, கதவை மூடினோம்.

போலீஸுக்கு தகவல்: உடனே அவர்கள் ஆபாச வார்த்தைகளால் விமர்சிக்க ஆரம்பித்தனர். வந்தவர்களில் ஒருவர் தான் மீடியாவில் இருப்பதாகத் தெரிவித்தார். மேலும், அவர்கள் கதவைப் பலமாக தாக்கினார்கள். நிலைமை மோசமாவதை அறிந்து நாங்கள் போலீஸுக்கு தகவல் தெரிவித்தோம். இதையடுத்து, சைதாப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் காவலர்களுடன் அங்கு வந்தார். பின்னர், பாரில் இருந்த அனைவரையும் காவல் துறையினர் உதவியுடன் வெளியே செல்ல அனுமதித்தோம். இதற்கிடையில், 2 செய்திச் சேனல்களில் இருந்து நிருபர்களும், கேமராமேன்களும் அங்கு வந்தனர். அவர்கள் வெளியேறிய இளைஞர்கள், இளம் பெண்களை அத்துமீறி வீடியோ எடுத்தனர். நாங்கள் எவ்வளவோ சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. பின்னர், உண்மைக்கு மாறான செய்தியை வெளியிட்டுள்ளனர். இதை சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோம் என்றார்.

அறிக்கை வழங்கல்: இதுகுறித்து காவல் துறை தரப்பில் விசாரித்தபோது, ``சிலர் அத்துமீறி பாருக்குள் நுழைந்துள்ளதாக பார் நிர்வாகம் தரப்பில் எங்களிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நாங்கள் சம்பவ இடம் விரைந்தோம். அப்போது, 2 செய்தி சேனல் நிருபர்களும் அங்கு வந்தனர். அவர்கள், பாரிலிருந்து வெளியேறியவர்களை வலுக்கட்டாயமாக வீடியோ எடுத்தனர். எங்களையும் வீடியோவில் பதிவு செய்து கொண்டனர். பாரில் நடைபெற்ற சம்பவம் மற்றும் அங்கு வந்த செய்தி சேனல்களின் செயல்பாடு உட்பட அனைத்து தகவல்களையும் அறிக்கையாகத் தயார் செய்து எங்களது உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ளோம். இதுவரை யார்மீதும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது'' என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x