Published : 07 Nov 2023 06:45 AM
Last Updated : 07 Nov 2023 06:45 AM

சென்னை | பணம் வராததால் ஆத்திரம்: மது போதையில் ஏடிஎம்-ஐ உடைத்த 2 பேர் கைது

சென்னை: ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க முயன்றபோது பணம் வராமல், பணம் எடுத்தது போல் செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்ததால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் இருவர் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்தனர். இதில், தொடர்புடையவர்களை போலீஸார் கைது செய்தனர். சென்னை தேனாம்பேட்டை, அண்ணா சாலையில் வங்கி ஒன்றின் ஏடிஎம் மையம் செயல்படுகிறது. கடந்த 26-ம் தேதி இரவு 11.30 மணியளவில் இங்குள்ள ஏடிஎம் இயந்திரத்தை இளைஞர்கள் 2 பேர் உடைத்தனர்.

சத்தம் கேட்டு அப்பகுதியைச் சேர்ந்த காவலாளி ஒருவர் விரைந்து வந்தார். உடனே சம்பந்தப்பட்ட இளைஞர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடினர். காவலாளி இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். மேலும், தகவல் அறிந்து வங்கி அதிகாரிகளும் சம்பவ இடம் விரைந்து பார்வையிட்டனர். அப்போது, ஏடிஎம் இயந்திரத்தின் முகப்பு கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தேனாம்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். முதல்கட்டமாக ஏடிஎம் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் துப்பு துலக்கப்பட்டது. இதில், ஏடிஎம் இயந்திரத்தை சேதப்படுத்தியது தி.நகரைச் சேர்ந்த கார் ஓட்டுநர் கிருபாகரன் (23), தேனாம்பேட்டையைச் சேர்ந்த கார்த்திகேயன் (24) என்பது தெரிந்தது. தலைமறைவாக இருந்த இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ’’சம்பவத்தன்று மதுபோதையில் கிருபாகரன் ஏடிஎம் கார்டு மூலம் பணம் எடுக்க முயன்றுள்ளார். ஆனால், ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் வராமல், பணம் எடுத்ததுபோல் செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கிருபாகரன், கார்த்திகேயன் இருவரும் கையால் ஏடிஎம் மானிடரை உடைத்தது தெரியவந்தது’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x