Published : 12 Oct 2023 09:03 AM
Last Updated : 12 Oct 2023 09:03 AM

சென்னை அருகே என்கவுன்ட்டரில் 2 ரவுடிகள் சுட்டுக்கொலை - நடந்தது என்ன?

திருவள்ளூர்: சென்னை அருகே இன்று அதிகாலை இரண்டு இடங்களில் காவல்துறையினரால் என்கவுன்ட்டர் சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. இதில் இரண்டு ரவுடிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே போலீஸார் நடத்திய என்கவுன்ட்டரில் ரவுடி முத்து சரவணன் மற்றும் ரவுடி சதீஷ் என்று இருவர் கொல்லப்பட்டுள்ளனர். கொலை வழக்கில் பிடிக்க முயன்றபோது, போலீஸாரை தாக்கி தப்பிச் சென்றதை அடுத்து என்கவுன்ட்டரில் ரவுடிகள் இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். என்கவுன்ட்டரில் ரவுடி முத்து சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், காயமடைந்த மற்றொரு ரவுடி சதீஷ், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட நிலையில் மரணம் அடைந்தார்.

என்ன நடந்தது?: ரவுடி முத்து சரவணன் என்பவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. குறிப்பாக ஏழு கொலை வழக்குகள் அவர்மீது உள்ளன. அதில், செங்குன்றம் மற்றும் சோழவரம் ஆகிய இரண்டு காவல் நிலையங்களில் மட்டும் 5 கொலை வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி இவர் சோழவரம் பகுதியில் உள்ள தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிப்பது போன்ற குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

இதனிடையே, கடந்த ஆகஸ்ட் மாதம் பாடியநல்லூர் அதிமுக ஊராட்சி மன்றத் தலைவர் பார்த்திபன் கொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு ரவுடி முத்து சரவணன் மூளையாக செயல்பட்டார் என வழக்கு பதியப்பட்ட நிலையில் செங்குன்றம் காவல்துறையினர் இதுதொடர்பாக விசாரணை நடத்திவந்தனர். இந்தக் கொலை தொடர்பாக ஏற்கனவே 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். ஆனால் முத்து சரவணன் தலைமறைவாகி இருக்க அவரை காவல்துறையினர் தேடி வந்தனர். டெல்லியில் பதுங்கி இருந்த அவரை கைது செய்து சோழவரம் அழைத்துச் செல்லும் வழியில் மீஞ்சூர் - வண்டலூர் சாலையில் போலீஸாரை தாக்கிவிட்டு அவர் தப்பிச்செல்ல முயன்றுள்ளார்.

அப்போது, ரவுடி முத்து சரவணனும், அவருடன் இருந்த மற்றொரு ரவுடி சதீஷ் என்பவரும் போலீஸார் மீது தாக்குதல் நடத்தியதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து தற்காப்புக்காக என்கவுன்ட்டர் நடத்தப்பட்டதில் முத்து சரவணன் நிகழ்விடத்தில் உயிரிழந்ததாகவும், காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட சதீஷ் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் செங்குன்றனம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, ரவுடிகள் முத்து சரவணன் மற்றும் சதீஷ் தாக்கியதில் காவலர்கள் 3 பேர் காயமடைந்தனர். அவர்கள் தற்போது சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதனிடையே, என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட ரவுடிகள் முத்து சரவணன் மற்றும் சதீஷ் ஆகியோரது உடல்கள் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

செங்கல்பட்டில் மற்றொரு என்கவுன்ட்டர்: செங்கல்பட்டு பெரியபாளையத்தை சேர்ந்த தணிகா என்ற தணிகாச்சலம் மீது திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்டங்களில் கொலை, கொள்ளை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. செங்கல்பட்டு - மாமண்டூர் அருகே காவல் துறையினரிடம் இருந்து தப்பிக்க முயன்ற ரவுடி தணிகாவை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். இதில் அவரது வலது கை மற்றும் வலது கால் பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது.

இவரைத் தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவரை காவல் துறையினர் அழைத்து சென்றபோது தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார். அதனால் அவரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்துள்ளனர். அவருக்கு தற்போது சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சித்தாமூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட வழக்கில் ஆஜராகாமல் இருந்த அவரை பிடிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதையடுத்து சென்னையில் பதுங்கி இருந்த அவரை நேற்று தனிப்படை பிரிவு போலீஸார் கைது செய்தனர். இந்த சூழலில் அவர் போலீஸ் வாகனத்தில் இருந்து தப்பி செல்ல முயன்றுள்ளார். அப்போதுதான் அவரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துள்ளனர். இந்த சம்பவம் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை மாமண்டூர் அருகே நேற்று இரவு நடைபெற்றுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x