Published : 28 Sep 2023 04:10 AM
Last Updated : 28 Sep 2023 04:10 AM

வாணியம்பாடி அருகே நீரில் மூழ்கி 2 மாணவிகள் உயிரிழப்பு: ஒப்பந்ததாரர் உட்பட 4 பேர் மீது வழக்கு

அம்பலூர்-புத்துக்கோயில் சாலையில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த 2 மாணவிகளின் உயிரிழப்புக்கு காரணமான ஒப்பந்ததாரர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியை உட்பட 4 பேர் மீது அம்பலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையில், மாணவிகளின் உடல்களை பெற்றோர் பெற்றுக்கொண்டு இறுதி சடங்குக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டம் சிக்கனாங் குப்பம் ராசன் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி வேலு. இவரது மகள் ராஜலட்சுமி (14). இவர், அதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு கூலி தொழிலாளி கோவிந்தராஜ் மகள் மோனிகா (10). இவரும், அதே பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தனர். இந்நிலையில், அரசு உயர் நிலைப் பள்ளி வளாகம் அருகே 10 அடி ஆழம், 14 அடி நீளத்துக்கு பெரிய பள்ளம் ஒன்று வெட்டப்பட்டுள்ளது. இந்த பள்ளம் மூடப்படாமல் கடந்த 1 மாதமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இந்த பள்ளத்தில் மழைநீர் குட்டைப்போல் தேங்கியுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்ற ராஜலட்சுமியும், மோனிகாவும் தேங்கிய தண்ணீரில் விளையாட சென்றபோது எதிர்பாராதவிதமாக அந்த பள்ளத்தில் விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த அம்பலூர் காவல் துறையினர் மாணவிகளின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், பிரேதப் பரிசோதனைக்கு பிறகு மாணவிகளின் உடல்கள் பெற் றோரிடம் நேற்று காலை ஒப்படைக் கப்பட்டது. ஆனால், மாணவிகளின் உடல்களை வாங்க மறுத்த பெற்றோர் மற்றும் பொதுமக்கள் அம்பலூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இதையடுத்து, பொதுமக்கள் ஒன்று திரண்டு, மாணவிகளின் உயிரிழப்புக்கு காரணமான ஒப்பந்ததாரரான தெக்குப்பட்டு பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் பாலாஜி என்பவர் மீதும், பள்ளி தலைமை ஆசிரியை மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அம்பலூரில் இருந்து புத்துக்கோயில் செல்லும் பிரதான சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அவ் வழியாக வந்த அரசுப் பேருந்தை அவர்கள் சிறைபிடித்தனர். இதனால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த நாட்றாம்பள்ளி வட்டாட்சியர் சாந்தி, அம்பலூர் காவல் துறை யினர் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், சம்பந்தப்பட்டவர்கள் அனை வரிடமும் விசாரணை நடந்து வருவதாகவும், மாணவிகளின் உயிரிழப்பு சம்பவத்தில் சட்டப் படியான அனைத்து நடவடிக்கை களும் எடுக்கப்படும்’ என உறுதி அளித்தனர்.

இதனையேற்று, பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். ஆனால், ஒப்பந்ததாரர் மற்றும் தலைமை ஆசிரியை மீது உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மாணவிகளின் உடல்களை வாங்குவோம் எனக் கூறி அம்பலூர் காவல் நிலையம் முன்பாக குவிந்தனர்.

இதற்கிடையில், 2 மாணவிகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஒப்பந்ததாரர் பாலாஜி, ஊராட்சி செயலாளர் தேவன், கிராம நிர்வாக அலுவலர் காசி நாதன், பள்ளி தலைமை ஆசிரியை கெஜலட்சுமி ஆகிய 4 பேர் மீதும் அம்பலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, உயிரிழந்த மாணவிகளின் உடல்களை பெற் றோர் பெற்றுக்கொண்டு இறுதி சடங்குக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x