Published : 21 Sep 2023 06:50 AM
Last Updated : 21 Sep 2023 06:50 AM

தாம்பரம் பாஜக பிரமுகர் கொலையில் 4 பேர் கைது

தாம்பரம்: தாம்பரம் அருகே உள்ள பழைய பெருங்களத்தூர் காமராஜர் தெருவை சேர்ந்தவர் பீரி வெங்கடேசன் (33). சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர், பாஜக பெருங்களத்தூர் முடிச்சூர் மண்டல பட்டியல் அணி தலைவராக பொறுப்பில் இருந்தார்.

இந்நிலையில் நேற்று முன் தினம் இவர் கொலை செய்யப்பட்டதை அடுத்து, பீர்க்கன்காரணை போலீஸார் விசாரணை நடத்தி வேளச்சேரி நேரு நகர் பகுதியை சேர்ந்த குணா (எ) குணசேகரன், முடிச்சூர் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார், அருண், தாம்பரம், கடப்பேரி பகுதியை சேர்ந்த சந்துரு ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

குணாவும், பீரி வெங்கடேசனும் ஒன்றாக ரியல் எஸ்டேட் தொழில் தனித்தனியாக செய்து வந்ததாகவும், இதில் புறம்போக்கு நிலங்களை விற்பனை செய்வதில் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டதாகவும், இதன் தொடர்ச்சியாக இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் கொலை செய்ய திட்டம் தீட்டி வந்துள்ளதாகவும் தெரிகிறது.

இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியன்று குணாவின் காரில் பீரி வெங்கடேசன், சதீஷ்குமார், அருண், சந்துரு ஆகியோர் சென்றுள்ளனர்.அப்போது குட்வில் நகர் பகுதியில் உள்ள காலி நிலத்தில் சென்று ஐந்து பேரும் மது அருந்தி உள்ளனர்.

அப்போது குணா, பீரி வெங்கடேசன் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து பீரி வெங்கடேசனை கொன்றுவிட்டு மற்ற 4 பேரும் தப்பினர் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து 4 பேரையும் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின்படி போலீஸார் சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x