Published : 20 Sep 2023 06:11 AM
Last Updated : 20 Sep 2023 06:11 AM

பெண்கள் அதிகளவில் ஓட்டும் ஸ்கூட்டர்களை குறிவைத்து திருடியவர் சிறையிலடைப்பு

இளஞ்செழியன்

சென்னை: பெண்கள் அதிகளவில் ஓட்டும் ஸ்கூட்டர்களை குறிவைத்து திருடிவந்தவர் கைது செய்யப்பட்டார். சென்னை, ராயபுரம், சூரிய நாராயணா தெருவில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்று கடந்த 5-ம் தேதி திருடுபோனது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ராயபுரம் போலீஸார்வழக்குப் பதிந்து விசாரித்தனர். சம்பவ இடம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதன் அடிப்படையில் இருசக்கர வாகனத்தை திருடியதாக மாதவரம், அலெக்ஸ் நகர், மோகன் கார்டன் பகுதியைச் சேர்ந்த இளஞ்செழியன் (53) என்பவரைக் கைது செய்தனர். அவரிடமிருந்த 8 ஸ்கூட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அனைத்தும் பெண்கள் அதிகமாக ஓட்டும் வகையை சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. கைதான இளஞ்செழியன் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், “கைது செய்யப்பட்ட இளஞ்செழியன், ராயபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடங்களில், பெண்கள் அதிகளவில் ஓட்டும் வாகனங்களைக் குறிவைத்து திருடியது தெரியவந்தது.

அவர் இதுபோன்ற பல வாகனங்களைத் திருடி உள்ளார். 8 வாகனங்கள் முதல்கட்டமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சிறையில் உள்ள அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளோம். அதில், மேலும் பல தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளது” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x