Published : 02 Aug 2023 04:00 AM
Last Updated : 02 Aug 2023 04:00 AM

கோவை கார் வெடிப்பு வழக்கில் மேலும் ஒருவரை கைது செய்தது என்.ஐ.ஏ

கோவை: கோவை கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் அருகே, கடந்தாண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதி கார் வெடிப்புச் சம்பவம் நடந்தது. இதில் காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் உயிரிழந்தார்.

போலீஸாரின் விசாரணையில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளரான முபின், மக்கள் கூடும் இடத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டது தெரியவந்தது. பின்னர் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) பிரிவுக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக முகமது தல்ஹா (25), முகமது அசாருதீன் (23), முகமது ரியாஸ் (27), பெரோஸ் இஸ்மாயில் (27), நவாஸ் இஸ்மாயில் (26), அப்சர்கான், முகமது தவுபீக் (25), உமர் பாரூக் (28), பெரோஸ்கான் (28), ஷேக் இதாயத் துல்லா, சனோபர் அலி ஆகிய 11 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது என்.ஐ.ஏ அதிகாரிகள் குற்றப்பத்திரிகை மற்றும் துணை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என என்.ஐ.ஏ அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக தெற்கு உக்கடம் ஜி.எம்.நகரைச் சேர்ந்த முகமது இத்ரிஸ் (25) என்பவரை என்.ஐ.ஏ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.

இவர், உயிரிழந்த முபினின் நெருங்கிய நண்பராவார். இவர்களுக்கு இடையே, கடந்த மூன்றாண்டுகளுக்கு இடையே நடந்த செல்போன் உரையாடலை ஆய்வு செய்த அதிகாரிகள், அதன் இறுதியில் முகமது இத்ரிசை கைது செய்தனர். இவரை திங்கள் கிழமை ரேஸ் கோர்ஸில் உள்ள தற்காலிக என்.ஐ.ஏ அலுவலகத்தில் ஆஜராக அதிகாரிகள் சம்மன் அனுப்பினர்.

அவர், தாமதமாக நேற்று ஆஜரானார். விசாரணையின் இறுதியில் அவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். தொடர்ந்து அவரை அதிகாரிகள் சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x