Published : 17 Jul 2023 05:38 AM
Last Updated : 17 Jul 2023 05:38 AM

புதுச்சேரி அருகே கார் மோதி 4 பெண்கள் உயிரிழப்பு; ஒட்டன்சத்திரம் அருகே பேக்கரிக்குள் புகுந்த மினி லாரி - 3 பேர் மரணம்

கோட்டக்குப்பம் அருகே சாலையோரம் கவிழ்ந்து கிடக்கும் கார்.

விழுப்புரம்/ஒட்டன்சத்திரம்: புதுச்சேரி அருகே விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தை அடுத்த புதுக்குப்பம் கிராம பெண்கள் புதுச்சேரியில் மீன்களை மொத்தமாக வாங்கி வந்து விற்பனை செய்வது வழக்கம்.

அதன்படி நேற்று அதிகாலையில் புதுச்சேரி செல்வதற்காக கிழக்கு கடற்கரை சாலையில் ஷேர் ஆட்டோவுக்காக அவர்கள் காத்திருந்தபோது சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி வேகமாக வந்த கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் மீது மோதியது. இதில் லட்சுமி (45), கோவிந்தம்மாள் (50) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், நாயகம், கமலம், கெங்கையம்மாள், பிரேமா ஆகிய 4 பேர் படுகாயமடைந்த நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு கெங்கையம்மாள் (45), நாயகம் (48) ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். 2 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

விபத்தில் கார் கவிழ்ந்து நொறுங்கியதில் காரை ஓட்டிவந்த சென்னையைச் சேர்ந்த விக்னேஸ்வரன் மற்றும் காரில் பயணம் செய்த கவுதம், சேது, பிரசாந்த், திரிஷா ஆகிய 5 பேர் காயமடைந்தனர். அவர்கள் புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்து குறித்து கோட்டக்குப்பம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

முதல்வர் நிவாரணம் அறிவிப்பு: விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர்ஸ்டாலின், அவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும், சிகிச்சை பெறுவோருக்கு தலா ரூ.50ஆயிரமும் வழங்க உத்தரவிட்டார்.

பேக்கரிக்குள் புகுந்த மினி லாரி: இதேபோன்று ஒட்டன்சத்திரம் அருகே பேக்கரிக்குள் மினி லாரி புகுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.

கோவை மாவட்டம் பாப்பம்பட்டி மாணிக்கபுரத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன், தனது மனைவி சரஸ்வதி, உறவினர்கள் விசுவநாதன், பழனிச்சாமி ஆகியோருடன் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியில் உள்ள கோயிலுக்கு நேற்று காலை காரில் புறப்பட்டுச் சென்றார். ஒட்டன்சத்திரம் அருகே கொசவபட்டி கிராமத்தில் சாலையோரம் இருந்த பேக்கரியில் டீ குடிக்க பிற்பகல் 1 மணியளவில் காரை நிறுத்தினர்.

அப்போது திண்டுக்கல் மாவட்டம், கள்ளிமந்தையம் அருகே கஞ்சிக்கால் வலசை கிராமத்தைச் சேர்ந்த சிவராஜ் தனது தாயார் காளியாத்தாளை, ஒட்டன்சத்திரம் மருத்துவமனைக்கு பைக்கில் அழைத்துச் சென்று கொண்டிருந்தார். கொசவபட்டி பேக்கரி அருகே சென்றபோது கோயம்புத்தூரில் மீன்களை இறக்கிவிட்டு மதுரை நோக்கி அதிவேகமாக வந்த மினி லாரி, பைக் மீது மோதியதோடு அருகில் இருந்த பேக்கரிக்குள் புகுந்தது.

இதில் பைக்கில் சென்ற காளியாத்தாள் (65), பேக்கரியில் டீ குடித்துக் கொண்டிருந்த ரவிச்சந்திரன் (46), அவரது உறவினர் பழனிச்சாமி (45) ஆகியோர் அந்த இடத்திலேயே இறந்தனர். படுகாயமடைந்த சிவராஜ் (40), திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மினி லாரி ஓட்டுநரான சோழவந்தானைச் சேர்ந்த ராம்குமார் மீது அம்பிளிக்கை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x