Published : 29 Jun 2023 04:00 AM
Last Updated : 29 Jun 2023 04:00 AM

ரூ.1,300 கோடி மோசடி புகார் - கோவை நிதி நிறுவனத்தின் 36 வங்கிக் கணக்குகள் முடக்கம்

கோவை: ரூ.1,300 கோடி மோசடி புகாரில் தொடர்புடைய கோவை நிறுவனத்தின் 36 வங்கி கணக்குகளை போலீஸார் முடக்கியுள்ளனர்.

கோவை மாவட்டம் சூலூரை சேர்ந்தவர் ரமேஷ் (30). இவர் பீளமேட்டில் யுடிஎஸ் என்ற நிதி நிறுவனத்தை கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கினார். இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு அதிக வட்டி தரப்படும் என்பது உள்ளிட்ட விளம்பரங்களை நம்பி ஏராளமானோர் முதலீடு செய்தனர். ஆனால் அறிவித்தபடி பணம் கிடைக்காததால் பாதிக்கப்பட்டவர்கள் கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் புகார் செய்தனர்.

போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தியதில், தமிழகம் முழுவதும் முதலீடு திரட்டி மொத்தம் ரூ.1,300 கோடி அளவுக்கு மோசடி நடைபெற்றது தெரியவந்தது. ரமேஷ் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். இந்நிலையில், யுடிஎஸ் நிதி நிறுவனத்தின் 36 வங்கி கணக்குகளை போலீஸார் முடக்கி உள்ளனர்.

இது குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கூறும்போது, ‘‘யுடிஎஸ் நிறுவன நிதி மோசடி தொடர்பாக இதுவரை 90 பேர் மட்டுமே புகார் அளித்துள்ளனர். நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ள ரமேஷை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளோம். நிதி நிறுவனத்தின் 36 வங்கி கணக்குகளை இதுவரை முடக்கி உள்ளோம். 2 வங்கி கணக்குகளில் இருந்த ரூ.16 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ரமேசுக்கு உதவியாக இருந்த 7 பேரை அடையாளம் கண்டுள்ளோம். அவர்களை கைது செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நிதி நிறுவனத்துக்கு சொந்தமாக 10 இடங்களில் வீடு, நிலம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவற்றின் அரசு வழிகாட்டு மதிப்பு ரூ.4 கோடி ஆகும். இதனை கையகப்படுத்தக் கோரி அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம்.

அரசு ஆணை பிறப்பித்ததும், இந்த சொத்துக்களை மாவட்ட வருவாய் அதிகாரி கையகப்படுத்தி நீதிமன்றத்தில் அனுமதி பெற்று ஏலத்தில் விட நடவடிக்கை எடுப்பார்’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x