Last Updated : 17 Jun, 2023 07:02 PM

 

Published : 17 Jun 2023 07:02 PM
Last Updated : 17 Jun 2023 07:02 PM

திருச்சியில் மது அருந்தியதால் இருவர் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டு: போலீஸ் விசாரணை

திருச்சி: திருச்சியில் மது அருந்தியதால் இருவர் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள தச்சங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர்கள் முனியாண்டி (60,) சிவக்குமார் (48). இருவரும் நேற்று மதியம் தச்சங்குறிச்சி டாஸ்மாக் கடையில் மது குடித்துள்ளனர். பின்னர் முனியான்டிக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.

இந்த நிலையில், முனியாண்டியுடன் மது அருந்திய சிவகுமாரை அவரது உறவினர்கள் இன்று எழுப்பியபோது படுக்கையிலேயே உயிரிழந்து கிடந்துள்ளார். இதையறிந்த அப்பகுதியினர் மது அருந்தியதால் இருவரும் உயிரிழந்ததாக காணிக்கினியநல்லூர் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், தச்சங்குறிச்சியில் போலீஸார் நடத்திய விசாரணையில், மது போதையில் உணவு அருந்தாமல் மது குடித்து வந்ததாக அவர்களது உறவினர்கள் கூறியுள்ளனர். இதையறிந்த திருச்சி மாவட்ட எஸ்பி சுஜித்குமார், ஏடிஎஸ்பி குத்தாலிங்கம், லால்குடி டிஎஸ்பி அஜய்தங்கம், உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், திருச்சி அரசு மருத்துவமனையில் இருவரது உடலையும் உடற்கூறு ஆய்வு செய்வதற்கான ஏற்பாடுகளை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர், மயிலாடுதுறையைத் தொடர்ந்து திருச்சியில் மதுகுடித்ததால் 2 பேர் உயிரிழந்ததாக வெளியாகும் தகவல் அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதில், மயிலாடுதுறை உயிரிழப்பு முன்விரோதத்தில் சயனைடு கலந்த மதுவை கொடுத்து சகோதரரே கொன்றது தெரிய வந்தது. இதேபோல திருச்சி சம்பவத்தில் வேறு ஏதும் காரணமா என போலீஸார் விசாரணை துரிதப்படுத்தியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x