Last Updated : 11 Jun, 2023 04:58 PM

 

Published : 11 Jun 2023 04:58 PM
Last Updated : 11 Jun 2023 04:58 PM

தேனி மாவட்ட எல்லையில் களைகட்டும் லாட்டரி விற்பனை

கூடலூர்: கேரளாவில் இருந்து தமிழக எல்லையான தேனி மாவட்டத்துக்குள் லாட்டரிகள் அதிகளவில் ஊடுருவி உள்ளன. இதனால் அதிர்ஷ்ட கனவில் ஏராளமானோர் தங்களது பணத்தை இழந்து வருகின்றனர்.

கேரளாவில் லாட்டரி விற்பனை அங்கீகரிக்கப்பட்ட தொழில். கடைகள், ஆன்லைன் மற்றும் தனிநபர்கள் மூலம் லாட்டரி விற்பனை அதிகம் நடக்கிறது. பெரும்பாலும் தினசரி லாட்டரி களே அதிகம். பிற்பகல் 3 மணிக்கே இதன் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. மேலும் பம்பர் என்ற பெயரில் பல கோடி ரூபாய் முதல் பரிசை முன்வைத்தும் ஏராளமான லாட் டரிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

பெரும்பாலும் நடுத்தர, கீழ்த்தட்டு மக்கள் அதிகளவில் லாட்டரி வாங்கி வருகின்றனர். கேரளாவில் இருந்து இந்த லாட்டரிகள் தேனி மாவட்டத்துக்குள் அதிகளவில் ஊடுருவி உள்ளன. குறிப்பாக கம்பம், கூடலூர், உத்தமபாளையத்தைச் சேர்ந்தவர்கள் தினமும் குமுளிக்கு தொழில் மற்றும் கூலி வேலைக்கு சென்று வருகின்றனர்.

அவ்வாறு செல்கையில் அதிர்ஷ்ட ஆர்வத்தில் ஏராளமான லாட்டரி சீட்டுகளை வாங்கி வருகின்றனர். மேலும் தமிழக சிறு வியாபாரிகள் பலரும் குமுளியில் லாட்டரிகளை வாங்கி வந்து தமிழக பகுதியில் மறை முகமாக விற்பனை செய்கின்றனர்.

இது குறித்து தமிழக எல்லையில் வசிப்போர் சிலர் கூறுகையில், லாட்டரி விற்பனை இப்பகுதியில் களைகட்டி வருகிறது. இதனால் தொழி லாளர்கள் பலரும் தங்களது பணத்தை இழக்கும் நிலை உள்ளது என்றனர்.

இது குறித்து போலீஸார் கூறுகையில், எல்லைப்பகுதி என்பதால் எளிதாக லாட்டரி தமிழகத்துக்குள் ஊடுருவுகிறது. தொடர்ந்து கண் காணித்து லாட்டரி விற்பனையை கட்டுப்படுத்தி வருகிறோம் என்றனர்.

லாட்டரி விற்றவர்கள் கைது: கூடலூர் கன்னிகாளிபுரத்தைச் சேர்ந்தவர் பொன்னப்பன்(70). இவர் கூடலூர் காய்கறி மார்க்கெட் அருகே நேற்று முன்தினம் லாட்டரி விற்பனை செய்தார். கூடலூர் போலீஸார் அவரை கைது செய்தனர். அனுமந்தன்பட்டி பாரதி ராஜா (28) என்பவர் கம்பத்தில் உள்ள கம்பம்மெட்டு சாலையில் லாட்டரி விற்றார்.

அவரை கம்பம் வடக்கு எஸ்ஐ முனியம்மாள் கைது செய்தார். மேலும் அவரிடம் இருந்து ரூ.64 ஆயிரத்து 680 மதிப்புள்ள லாட்டரியும், லாட்டரி விற்ற பணம் ரூ.15 ஆயிரமும் பறிமுதல் செய்யப்பட்டன. அவ்வப்போது கைது நடவடிக்கை தொடர்ந்தாலும் லாட்டரி விற்பனையை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் லட்சாதிபதி ஆசையில் ஏராளமான தொழிலாளிகள் தங்களது பணத்தை இழந்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x