

சென்னை: தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் நடைபெற்ற 34-வதுசிறப்பு மெகா முகாமில் 13.77 லட்சம்பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது. தமிழகத்தில் அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி போடும் வகையில், மெகா கரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 33 மெகா முகாம்கள் நடைபெற்றுள்ளன.
இந்நிலையில், 34-வது மெகா கரோனா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் நேற்று நடைபெற்றது. அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம், பள்ளி, ஊராட்சி, நகராட்சி அலுவலகம், பேருந்து நிலையம், ரயில்நிலையம் என மக்கள் அதிகம்கூடும் அனைத்து இடங்களிலும்முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. சென்னையில் மட்டும் 2,500 இடங்களில் முகாம்கள் அமைத்து தடுப்பூசி போடப்பட்டது.
சென்னை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி,ராணிப்பேட்டை மாவட்டங்களில் நடைபெற்ற முகாம்களை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார். பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
தமிழகம் முழுவதும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை முகாம் நடைபெற்றது. இதில் 13.77 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது.
மையங்கள் இன்று செயல்படாது
முகாம் பணியில் ஈடுபட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு இன்று(ஆகஸ்ட் 22) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், வழக்கமான தடுப்பூசி மையங்கள் செயல்படாது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டும் தடுப்பூசி போடப்படும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறினர்.