Published : 14 May 2023 12:02 PM
Last Updated : 14 May 2023 12:02 PM

இஸ்லாமியர்களுக்கான படம் என்பதால்தான் வேலை செய்தேன் - ‘ஃபர்ஹானா’ குறித்து எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன்

சென்னை: ‘ஃபர்ஹானா’ திரைப்படம் இஸ்லாமியர்களுக்கான படம் என்பதால்தான், அதில் தான் பணியாற்றியதாக எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் தெரிவித்துள்ளார்.

நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘ஃபர்ஹானா’. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியானபோது இப்படம் இஸ்லாமியர்களை தவறாக சித்தரிப்பதாக சில அமைப்புகள் குற்றம் சாட்டின. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (மே 12) இப்படம் திரையரங்குகளில் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.

இப்படம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய எழுத்தாளரும் இப்படத்தின் வசனகர்த்தாவுமான மனுஷ்யபுத்திரன் கூறியதாவது: "எந்த ஒரு படம் எடுத்தாலும் அதில் ஏதாவது ஒரு மதத்தையோ அல்லது ஜாதியையோ பின்புலமாக வைத்துத் தான் எடுக்க முடியும். அதில் இஸ்லாமியர்கள் பின்புலத்தை வைத்து எடுக்கக் கூடாது என்று கூறி பயத்தை ஏற்படுத்துவது சரியானதல்ல. கேரளாவில், அதிகமான படங்கள் இஸ்லாமிய பின்புலத்துடன் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அங்கெல்லாம் இதுபோன்ற சர்ச்சைகள் எழுவதில்லை. அப்படி சர்ச்சை எழுமேயானால், அது குறிப்பிட்ட ஒரு மதத்தையோ அல்லது சமுதாயத்தையோ குறிப்பிட்டு தீவிரவாதிகள், ஜிகாதி அல்லது மதமாற்றம் செய்பவர்கள் என்று காட்டும் போதுதான் எழுகிறது.

இஸ்லாமியர்களைப் பற்றிய கட்டுக் கதைகளை எதிர்த்து போராடிக் கொண்டிருப்பவன் நான். இது போன்ற படங்கள் வருவதற்கு நாம் உற்சாகப்படுத்த வேண்டும். படம் எடுப்பவர்கள் என்ன கதை எழுதுகிறார்களோ அதை காட்டித்தான் ஆக வேண்டும். யதார்த்தத்தில் உண்மை இருக்கிறதா இல்லையா என்று பார்க்க வேண்டுமே தவிர, யதார்த்தத்தை எடுக்கவே கூடாது என்று பேசுவது நியாயமற்றது என்று நான் கருதுகிறேன்.

ஒரு படத்தின் வாழ்வியலை காட்டுவதற்கும், தவறான அரசியல் பிரச்சாரம் செய்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது. தவறான அரசியல் பிரச்சாரம் இருந்தால் நானே தெருவில் இறங்கி போராட்டம் செய்வேன். ஆனால், இந்த படம் அப்படி இல்லை. நான் இந்த படத்தில் பணியாற்றுகிறேன். இஸ்லாமியர்களுக்கு தொடர்ந்து குரல் கொடுப்பவன் நான். அப்படிப்பட்ட நான் இப்படி ஒரு படத்தில் வேலை செய்கிறேன் என்றால் இது இஸ்லாமியர்களுக்கான படம் என்பதால்தான்." இவ்வாறு மனுஷ்யபுத்திரன் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x