Published : 23 Jul 2022 05:17 PM
Last Updated : 23 Jul 2022 05:17 PM

“என்னை நடிகனாக மக்கள் ஏற்றுக்கொண்டதற்கு சந்தானம்தான் காரணம்” - உதயநிதி

''என்னை நடிகராக மக்கள் ஏற்றுக்கொண்டதற்கு நடிகர் சந்தானம்தான் காரணம்'' என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

'மேயாத மான்' 'ஆடை' உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிக்கும் திரைப்படம் 'குலு குலு'. இந்தப் படத்தில் நாயகியாக அதுல்யாசந்திரா நடிக்கிறார். தவி, நமிதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், சாய் தீனா, 'லொள்ளு சபா' மாறன், சேசு ஆகியோர் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் நிறைவடைந்தது. படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது. ஜூலை 29 படம் வெளியாகவுள்ள நிலையில் இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசுகையில், ''நான் வேலைபார்த்த படங்களில் இந்தப் படம் எனக்கு மிகவும் பிடித்தமான படம். இயக்குநரிடம் ஒரு புத்துணர்வான எழுத்து வடிவம் இருக்கிறது. என்னை இந்தப் படத்தில் சுதந்திரமாக வேலை பார்க்க அனுமதித்தார். ரத்னகுமாருக்கு தமிழ் சினிமாவில் பெரிய இடம் இருக்கிறது. இந்தப் படம் எனது இண்டிபெண்டண்ட் ஆல்பமாக இருக்கும். இந்தப் படம் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு முக்கியமான படமாக இருக்கும்'' என்றார்.



இயக்குநர் ரத்னகுமார் பேசுகையில், ''நான் படம் இயக்கி மூன்று வருடங்கள் கடந்து விட்டது. இந்தப் படத்திற்காக இயக்குனர் ரவிக்குமார், மடோனா அஸ்வின், லோகேஷ் கனகராஜ் என பல நண்பர்கள் உதவியுள்ளனர். அவர்களின் பங்கு இந்தப்படத்தில் இருக்கிறது. ஒரு முறை லோகேஷ் செட்டுக்கு வந்து பார்த்தபோது நாயகன் சந்தானத்தை அவருக்கு அடையாளம் தெரியவில்லை.

அந்தளவு சந்தானம் தோற்றம் மாறியிருந்தது. இந்த படம் கொஞ்சம் வித்தியாசமான படம், கதாபாத்திரங்கள் எல்லாம் வித்தியாசமாக இருக்கும். அதை சரியான திரைப்படமாக மாற்றியது சந்தோஷ் நாராயணன் தான்'' என்றார்.

நடிகர் சந்தானம் கூறியது: ''இந்தப் படத்தை பார்த்து உதயநிதி கொடுத்த பரிந்துரைகள் ஒரு இயக்குநருக்கான பார்வையில் இருந்தது. இந்தப் படத்தை வெளியிட பெரும் உதவியாய் இருந்தார்.

இந்த கதையை ரத்னகுமார் கூறும் போது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இன்றைக்கு தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் எதிர்பார்ப்பது இந்தப் படத்தில் இருக்கும். சந்தோஷ் நாராயணன் எனக்கு செட்டாகும் இசையை ஹிட்டாகும்படி தந்திருக்கிறார். அவர் பாடல்கள் தான் எல்லா இடத்திலும் கேட்கிறது. இந்தப் படத்தில் ரத்னகுமார் கடின உழைப்பை போட்டுள்ளார்'' என்றார்.

நடிகர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, ''நான் இங்கு வந்தது தயாரிப்பாளராக, நடிகராக அல்ல. எப்போதும் என் 'நண்பேண்டா' 'பார்த்தா' தான் சந்தானம். அவரால் தான் என்னை நடிகனாக மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். இந்தப் படம் நான் பார்த்துவிட்டேன். படம் சிறப்பாக வந்துள்ளது. இந்தப் படத்தை இயக்குனர் ரத்னகுமார் எடுக்கிறார் என்பதால் படம் பார்க்காமலே, இந்தப் படம் சிறப்பான ஒன்றாக இருக்கும் என நம்பினேன். இந்தப் படத்தில் சந்தானம் தாண்டி அனைவரும் ரசிக்க வைத்துள்ளனர்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x