Published : 13 May 2020 10:08 PM
Last Updated : 13 May 2020 10:08 PM
'சிந்து பைரவி' க்ளைமாக்ஸ் காட்சிக்காக தனக்கும் கே.பாலசந்தருக்கும் நடந்த சண்டை குறித்து இயக்குநர் வஸந்த் பகிர்ந்துள்ளார்.
கே.பாலசந்தர் இயக்கத்தில் சிவகுமார், சுஹாசினி, சுலோச்சனா, டெல்லி கணேஷ், ஜனகராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'சிந்து பைரவி'. 1985-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை கே.பாலசந்தரே தயாரித்திருந்தார். பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் சிறந்த நடிகை, சிறந்த இசையமைப்பாளர் மற்றும் சிறந்த பின்னணி பாடகி ஆகிய மூன்று தேசிய விருதுகளை வென்றுள்ளது.
இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிக்காக தனக்கும் கே.பாலசந்தருக்கு இடையே நடந்த சண்டை குறித்து இயக்குநர் வஸந்த் நினைவு கூர்ந்துள்ளார். இது தொடர்பாக இயக்குநர் வஸந்த் கூறியிருப்பதாவது:
"கே. பாலச்சந்தர் அவர்கள் எனக்கு நிறைய உரிமை தந்திருந்தார். நானும் ஒரு மகன் போல அவரிடம் என்ன வேண்டுமானாலும் பேசுவேன். எனக்கு அவர் மீது அன்பு, மரியாதை அதிகம். ஆனால் அவரிடம் நான் நிறைய சண்டையும் போட்டிருக்கிறேன்.
'சிந்து பைரவி' படத்தின் இறுதிக் காட்சி. முதலில் சுகாசினியும், சுலோச்சனா கதாபாத்திரங்களும் சேர்வது போல யோசித்து வைத்திருந்தார். இருவருமே சிவகுமார் கதாபாத்திரத்துக்கு மனைவியாக இருப்பது போல. ஆனால் அதை நான் ஒப்புக்கொள்ளவே இல்லை. தடுத்தேன், சண்டை போட்டுக் கொண்டிருந்தேன். நான் வயதில் சிறியவனாக இருந்தாலும் அவர் அதற்கான உரிமையை எனக்குத் தந்திருந்தார்.
அவரால் நான் சொல்வதை மீறவும் முடியவில்லை அதே நேரம் அவர் நினைத்ததும் சரி என்றே அவருக்குத் தோன்றியது. நான் என்ன சொன்னாலும் அவர் ஒப்புக்கொள்ள வில்லை. ஒரு கட்டத்தில், உங்கள் இயக்கம் தானே, உங்கள் விருப்பப்படி செய்யுங்கள் என்று சொன்னாலும் அவர் விடவில்லை.
அவர் மகள் புஷ்பாவிடன் கேட்கச் சொன்னேன். அவர் நான் சொன்ன கருத்தையே சொல்லியிருக்கிறார். அப்போது எழுத்தாளர் பாலகுமாரன் எங்களுடன் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவர் அந்த இறுதிக் காட்சிக்கு ஆதரவு சொன்னவர். அப்போது எனக்கு ஒன்று தோன்றியது.
சார் பாலகுமாரன் சொன்னதைக் கேட்கிறீர்கள். அவருக்கு இரண்டு மனைவி. அதனால் அவர் இதை ஆதரிக்கலாம். ஆனால் ஜேகேபி கதாபாத்திரம், சங்கீதத்துக்காக ஒருத்தர், மசால் வடை நன்றாகச் செய்வதற்காக ஒருவரை, சக்கரை பொங்கலுக்காக ஒருவரை என திருமணம் செய்து கொள்ள முடியாது என்று நான் விவாதித்தேன். பாலச்சந்தரின் திறமை பாருங்கள். அவருக்கு நான் சொன்னது புரிந்து அதை அப்படியே வசனமாக படத்தில் வைத்தார். நாம் உறுதியாக ஒரு விஷயத்தைச் சொல்லும்போது அதை வெளிப்படுத்தும் உரிமையைத் தந்தது அவரது பெருந்தன்மை. பெருமை"
இவ்வாறு இயக்குநர் வஸந்த் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment