Published : 05 Jan 2020 07:38 PM
Last Updated : 05 Jan 2020 07:38 PM
தான் இவ்வளவு பெரிய நடிகர்களுடன் நடித்தாலும் பட விழாக்களைப் புறக்கணிக்கும் நயன்தாரா, விருது வழங்கும் விழாக்களில் மட்டும் தவறாமல் கலந்து கொள்கிறார்.
தான் நடித்த எந்தவொரு படத்தின் இசை வெளியீட்டு விழா, பத்திரிகையாளர் சந்திப்பு என எதிலுமே நயன்தாரா கலந்து கொள்வதில்லை. கடந்தாண்டு சிரஞ்சீவியுடன் 'சைரா நரசிம்மா ரெட்டி', விஜய்யுடன் 'பிகில்', அஜித்துடன் 'விஸ்வாசம்', 'ஐரா', சிவகார்த்திகேயனுடன் 'mr.லோக்கல்' என நடித்துத் தான் எப்போதுமே நம்பர் ஓன் என நிரூபித்தார். ஆனால், எந்தவொரு படத்தின் விளம்பரப்படுத்துதல் நிகழ்ச்சியிலும் நயன்தாரா கலந்து கொள்ளவில்லை.
சீரஞ்சிவி நடித்த 'சைரா நரசிம்மா ரெட்டி' படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது பெரும் விவாதமாக உருவானது. கோடிகளில் சம்பளம் வாங்குபவர் எப்படிக் கலந்து கொள்ளாமல் இருக்கலாம் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால், எதற்குமே படக்குழுவினர் பதிலளிக்கவில்லை.
ஆனால் விருது நிகழ்ச்சிகள் என்று வரும் போது, தனக்கு விருது வழங்கப்பட்டால் அதை மறுக்காமல் வாங்குவதற்குக் கலந்து கொள்கிறார். இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. நேற்று (ஜனவரி 4) சென்னையில் நடைபெற்ற ஜீ தமிழ் விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனக்கு வழங்கப்பட்ட 2 விருதுகளை வாங்கிக் கொண்டார்.
சம்பளம் வாங்கிக் கொண்டு நடிக்கும் படங்களின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாதவர், எப்படி விருது நிகழ்ச்சியில் மட்டும் கலந்து கொள்ளலாம் என்ற விமர்சனம் மீண்டும் நயன்தாரா மீது வைக்கப்படுகிறது. பேட்டிகள், சமூக வலைதளம் என அனைத்திலுமிருந்து ஒதுக்கியிருக்கும் நயன்தாரா இந்தக் கேள்விக்கு விரைவில் பதிலளித்தால் நலமாக இருக்கும் என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பும்.
இந்தாண்டு கண்டிப்பாக 'நெற்றிக்கண்' படத்தின் விழாவில் நயன்தாரா கலந்து கொள்வார் என்று திரையுலகினர் கருதுகிறார்கள். ஏனென்றால், மிலந்த் ராவ் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அவருடைய காதலர் விக்னேஷ் சிவன் என்பது தான் இதற்குக் காரணம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT