Published : 16 Jul 2019 02:51 PM
Last Updated : 16 Jul 2019 02:51 PM
'வடசென்னை 2' படம் தொடர்பாக உருவான வதந்திக்கு, தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் 'வடசென்னை'. 2018-ம் ஆண்டு அக்டோபர் 17-ம் தேதி வெளியான இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாகப் பெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும், இந்தப் படம் 2 பாகங்களாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
முதல் பாகத்தின் முடிவிலேயே, கதை இன்னும் முற்றுப்பெறாமல் இருக்கிறது. இதனால், 2-ம் பாகத்தின் எப்போது வெளியீடு என்ற கேள்விகள் எழுந்தன. தற்போது 'அசுரன்' மற்றும் துரை.செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகும் படம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ்.
இவ்விரண்டு படங்களைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ், மாரி செல்வராஜ், செல்வராகவன், ஆனந்த் எல்.ராய் உள்ளிட்ட பல இயக்குநர்களின் கதையில் நடிக்க உறுதியளித்துள்ளார். இதில் கார்த்திக் சுப்புராஜ் படம் முதலில் தொடங்கப்படும் என தெரிகிறது.
'வடசென்னை' 2-ம் பாகம் தவிர்த்து பல படங்களில் நடிக்கவுள்ளதால், அந்தப் படம் கைவிடப்பட்டதாகத் தகவல் வெளியானது. இது பெரும் வைரலாகப் பரவியதைத் தொடர்ந்து தனுஷ் தனது ட்விட்டர் பதிவில், “எதனால் என் ரசிகர்களிடையே குழப்பம் வந்தது என்று தெரியவில்லை. 'வடசென்னை 2' படம் கண்டிப்பாக வரும். என் பக்கத்திலிருந்து அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்பட்ட தகவல் வரும் வரை எனது படம் பற்றிய எந்த வதந்திகளையும் நம்பாதீர்கள். நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT