Published : 24 Jun 2015 02:26 PM
Last Updated : 24 Jun 2015 02:26 PM
'லிங்கா' சிங்காரவேலன் தயாரிக்கும் 'சூப்பர் ஸ்டார்' ரஜினியை கலாய்ப்பதை நோக்கமாகக் கொண்ட 'தமிழ்ப் படம்' பாணியிலான படத்தில் நடிப்பதற்கு 'பவர் ஸ்டார்' சீனிவாசன் சம்மதம் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்தின் கவனம் ஈர்க்கும் நோக்குடன், அமுதன் இயக்கத்தில் வெளியான 'தமிழ் படம்' பாணியில், 'பவர் ஸ்டார்' சீனிவாசனை வைத்து கலாய்ப்புப் படம் தயாரிக்கத் திட்டமிட்டிருப்பதாக 'லிங்கா' விநியோகஸ்தர்கள் புதிய தகவல் ஒன்றை கிளப்பிவிட்டார்கள்.
அந்தப் படத்தைத் தயாரிக்கும் முயற்சியில் 'லிங்கா' விநியோகஸ்தர் சிங்காரவேலன் தயாரிப்பதாகவும் கூறப்பட்டது. தொடர்ச்சியாக வெற்றி படங்களையே கொடுத்துவரும் ஒரு நட்சத்திர நடிகர், ஒரு படுதோல்வி படத்தைக் கொடுக்கிறார். அந்தப் படத்தினால் வரும் நஷ்டங்களை எப்படி விநியோகஸ்தர்கள், அந்த நாயகனிடம் இருந்து திரும்பி வாங்கினார்கள் என்பதே மையக்கரு என்றும் தகவல் கசிந்தது.
எனக்கு போட்டி எப்போதுமே சூப்பர் ஸ்டார் தான் என்று கூறிவரும் பவர் ஸ்டார் இப்படத்தில் நாயகன் வேடத்தில் நடிக்க இருக்கிறார் என்றும், இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதேவேளையில், லிங்கா சிக்கலில் ரஜினிக்கு பல்வேறு வகைகளில் நெருக்கடி கொடுத்து வரும் தொடர்புடைய விநியோகஸ்தர்கள், அவரது இமேஜை சீர்குலைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகவே, இந்தக் கலாய்ப்புப் படம் குறித்த தகவல்களை வெளியிட்டு வருவதாக, ரஜினிக்கு நெருக்கமான தரப்பு குற்றம்சாட்டியது.
இது தொடர்பாக பவர் ஸ்டார் சீனிவாசனை இன்று காலை தொடர்பு கொண்டு கேட்ட போது, "அப்படியா.. என்னை யாரும் இப்படம் தொடர்பாக தொடர்பு கொள்ளவில்லை. அந்தச் செய்தியில் உண்மையில்லை" என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், பவர் ஸ்டார் சீனிவாசன் இன்று பிற்பகல் செல்பேசியில் அழைத்து ஒரு தகவல் சொன்னார். "இப்போது தான் அப்படத்தின் தயாரிப்பாளர் சிங்காரவேலன் வந்து படம் குறித்து எல்லாம் பேசிவிட்டு சென்றார். அப்படத்தில் நான் நடிப்பது உறுதியாகிவிட்டது" என்று என்று அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT