Published : 28 Jun 2015 01:47 PM
Last Updated : 28 Jun 2015 01:47 PM
படுத்துக் கொண்டு மேலே எச்சில் துப்பினால் அது நம் மீதுதான் விழும் என்பதை இன்றைய தலைமுறை நடிகர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று நடிகை ராதிகா அறிவுரை கூறியுள்ளார்.
நடிகை ஜெயப்பிரதாவின் மகன் சித்து, ஹன்சிகா மோத்வானி நடிப்பில் உருவாகியுள்ள ‘உயிரே உயிரே’ படத்தின் பாடல் மற்றும் டிரெயிலர் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நடிகை ஜெயப்பிரதா, சுமலதா, ஸ்ரீபிரியா, ராதிகா, அனில்கபூர், மோகன்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் அமர்சிங், படத்தின் இயக்குநர் ராஜசேகர், ஹன்சிகா மோத்வானி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதில் நடிகை ராதிகா பேசும்போது, “இந்த விழாவில் பங்கேற்க வந்துள்ள அனைவரும் பல ஆண்டுகளாக நண்பர்களாக இருக்கிறோம். எங்களுக்குள் எப்போதும் எந்த விதமான பிரச்சினையும் வந்ததில்லை. எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் சந்தோஷமாக கலந்து கொள்கிறோம். கீழே படுத்துக் கொண்டு மேலே எச்சில் துப்பினால், அது நம் மீதுதான் விழும் என்பதை இன்றைய இளம் தலைமுறை நடிகர்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என்றார்.
நடிகர் சங்க பிரச்சினை தீவிரமடைந்துள்ள நிலையில் நடிகை ராதிகா இதுபோல பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சரத்குமாருடன் மோதும் விஷாலை மனதில் வைத்துத்தான் அவர் இப்படி பேசினாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT