Published : 26 Jun 2015 10:50 AM
Last Updated : 26 Jun 2015 10:50 AM

நடிகர் சங்க தேர்தலை நடத்த உயர் நீதிமன்றம் நிபந்தனை

நடிகர் சங்கம் தொடர்பான வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், நடிகர் சங்க தேர்தல் நடவடிக்கைகளை தொடரலாம் என்றும் முடிவுகள் நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

நடிகர் சங்க தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. ஜூலை 15-ம் தேதி தேர்தல் நடக்கிறது. தேர்தல் நடைபெறும் நாள் வேலை நாள் என்பதால் தேர்தல் தேதியை மாற்றவேண்டும் என்றும், ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியின் மேற்பார்வையில் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் நடிகர் விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதாரவி பதிலளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து நடிகர் சங்க தேர்தலுக் கான தேதி அதிகாரமிக்க செயற் குழுவின் மூலம்தான் முடிவு செய்யப்பட்டது என்று அவர் பதில் மனு தாக்கல் செய்தார்.

இதற்கிடையே நடிகர் சங்க தேர்தலுக்கான வாக்காளர் பட்டி யலில் குளறுபடிகள் உள்ளதாகவும் தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என்றும் கோரி நடிகர் பூச்சி முருகன் சில நாட்களுக்கு முன்பு மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு, “தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் தொடங்கவுள்ளது. தேர்தல் சார்ந்த பணிகளை தொடரலாம். ஆனால் இறுதி முடிவு என்பது நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும்” என்று கூறி வழக்கை ஒத்தி வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x