Published : 29 Jun 2015 07:17 AM
Last Updated : 29 Jun 2015 07:17 AM

பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்: மாணவ, மாணவிகளுக்கு பரிசு - சிவகுமார் கல்வி அறக்கட்டளை வழங்கியது

‘சிவகுமார் கல்வி அறக்கட்டளை’ சார்பில் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 25 மாணவ, மாணவியருக்கு தலா ரூ.10,000 வழங்கப்பட்டது.

இவ்விழாவில் பேசிய நடிகர் சிவகுமார், "1979ம் ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்ட சிவகுமார் கல்வி அறக்கட்டளை தொடர்ந்து ப்ளஸ்-டூ தேர்வில் சிறந்த உயர்ந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகிறது. 30 ஆண்டுகள் என் பொறுப்பில் இயங்கிய அறக்கட்டளையை அதற்குப் பிறகு அகரம் ஃபவுண்டேஷன் பொறுப்பேற்று சிறப்பாக கல்விப்பணி செய்து வருகிறது. சிறிய அளவில் ஏழை மாணவர்களுக்கு செய்த உதவியை, என்னுடைய பிள்ளைகள் இப்போது நல்ல முறையில் செய்து வருகிறார்கள். கிராமத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்கள் படிக்க எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். கல்வி ஒருவரின் வாழ்க்கைத் தரத்தை எந்தளவு உயர்த்தும் என்பதை நான் அனுபவபூர்வமா உணர்ந்திருக்கிஆறேன். என்னைப் போல ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்து நன்றாகப் படிக்கிற பிள்ளைகளுக்கு என்னால் முடிந்த உதவியைச் செய்வதில் மிகுந்த மனநிறைவு அடைகிறேன். தடைகளைத் தாண்டி பெற்ற முதல் வெற்றி இது. இன்னும் போக பயணம் வெகுதூரம் உள்ளது. மாணவர்கள் தங்களுடைய கவனம் சிதறாமல், தொடர்ந்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும்" என்று தெரிவித்தார்.

இவ்விழாவில் பேசிய சூர்யா, "ஒரு காரியத்தைத் தொடங்குவது பெரிய விஷயம் இல்லை. தொடங்கிய காரியத்தை தொடர்ந்து நடத்துவது தான் பெரிய விஷயம். அப்பாவிடம், நாங்கள் கற்றுக் கொண்ட முக்கியமான பாடம் அது. ஆரம்பிக்கும் முன்பு நூறு முறை யோசிப்பார். ஆரம்பித்துவிட்டால் அந்த காரியம் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று பாடுபடுவார். 36 வருஷமா நடக்கும் இந்த நிகழ்வு அதற்கு ஒரு உதாரணம். இங்கே பரிசு பெற்ற மாணவர்கள் எல்லாரும் சிறப்பான முறையில் கல்விகற்றவர்கள். அதை சிறப்பு செய்யும் நிகழ்வு தான் இது.

அகரம் ஃபவுண்டேஷன் நம் சமூகத்தில் இருக்கும் அடித்தட்டு மக்களின் கல்வி வளர்சிக்கு தன்னால் முடிந்த பணிகளைச் செய்து வருகிறது. இந்த ஆண்டோடு அகரம் அறக்கட்டளை மூலம் உயர்கல்வி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 1300 பேராக உயர்கிறது. தனிப்பட்ட முறையில் எனக்கு இது சாத்தியம் இல்லை. தகுதியுள்ள ஏழை மாணவர்களின் கல்லூரி கனவை, பல நல்ல உள்ளம் கொண்டவர்களின் உதவியோடு நனவாக்கி இருக்கிறோம். தமிழகத்தின் தரம் வாய்ந்த முக்கியமான கல்வி நிறுவனங்கள், அகரம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்உம் மாணவர்கள் இலவசமாக படிக்க வாய்ப்பு தருகின்றன. தரமான கல்வி ஏழை மாணவர்களுக்கு கிடைக்க கரம் கோர்த்து உதவும் அனைவருக்கும் என் நன்றி." என்று தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x