Published : 18 Jun 2015 08:00 PM
Last Updated : 18 Jun 2015 08:00 PM
'பாபநாசம்' பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடந்தது. கமல், கௌதமி, நிவேதா தாமஸ், எம்.எஸ்.பாஸ்கர், தயாரிப்பாளர்கள் ராஜ்குமார், ஸ்ரீப்ரியா ஆகியோர் இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இதில் கமல் பேசியதாவது: '' 'பாபநாசம்' படத்தை நானே இயக்கி, நடித்திருந்தால் எல்லா நடிகர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள் என்று கூறுவேன். ஆனால், இப்படம் எனது கதையும் இல்லை. என்னுடைய தயாரிப்பும் இல்லை. 'பாபநாசம்' படத்தில் நடித்திருக்கும் சிறு சிறு கதாபாத்திரங்கள் கூட பெரிய அளவில் பேசப்படும்.
செல்போன்களால் நடக்கும் முறைகேடுகள் அதிக ஆபத்தை ஏற்படுத்துகின்றன. கார் வாங்கிவிட்டதால் கடத்திக் கொண்டு போய்விடுவார்கள் என்று சொல்ல முடியாது. செல்போனால் நல்ல விஷயங்களுக்கு இருக்கிறது.பேட்டி எடுக்க வேண்டும் என்றால் கூட, கேட்டுவிட்டு தான் எடுக்கிறார்கள். செல்போனில் புகைப்படம் எடுத்த பிறகே, உங்களோடு புகைப்படம் எடுத்துக்கொள்ளலாமா என்று அனுமதி கேட்கிறார்கள். ஒரு நடிகனாக எனக்கு செல்போன் அதிக தொல்லையைக் கொடுக்கிறது. என் தனி உரிமை பாதிக்கப்படுகிறது.
கெளதமி என்னை பொறுத்தவரை உச்ச நட்சத்திரம் தான். இப்படத்தில் சில நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்தவுடன் போட்டு பார்த்தோம். ஒரு நல்ல நடிகையை வீட்டிற்குள் அடைத்துவிட்டோமே என்று தோன்றியது. எனது அடுத்த படத்தில் அவர் நடிக்கவில்லை. அவர் தொடர்ந்து நடிப்பது என்பது அவருடைய உரிமை. அதில் நான் தலையிட மாட்டேன்.
என்னுடைய படங்களில் நான் ஒரு ஸ்டாராக நடிப்பதில்லை. அப்பாத்திரத்திற்கு என்ன தேவையோ அப்படி நடிக்கிறேன்.
பாவத்தைத் தொலைக்கும் இடம் 'பாபநாசம்' என்று சொல்வார்கள். அதனால் தான் இந்தப் படத்துக்கு 'பாபநாசம்' என்று பெயர் வைத்தோம். ஊருக்கேற்றார் போல திருநெல்வெலி பாஷை பேசியிருக்கிறோம்'' என்று கமல் கூறினார்.
இயக்குநர் ஜீத்து ஜோசப் மலையாளப் படத்தின் படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றிருக்கிறார். அதனால், இந்த சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT