Published : 28 May 2015 07:46 PM
Last Updated : 28 May 2015 07:46 PM

ஜிகர்தண்டா படத்தை பிற மொழிகளில் விற்க இடைக்காலத் தடை: கார்த்திக் சுப்புராஜ்

ஜூன் 11, 2015 வரை 'ஜிகர்தண்டா' திரைப்படத்தின் பிற மொழி உரிமத்தை விற்கவோ, விளம்பரப்படுத்தி இந்தி மற்றும் ஏனைய மொழிகளில் விற்க முயற்சிக்கவோ கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது என்று 'ஜிகர்தண்டா' படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், '' 'ஜிகர்தண்டா 'திரைப்படத்தின் இந்தி மொழிமாற்று உரிமையையொட்டி எழும் பிரச்சினையை உங்கள் முன் கொண்டுவருகிறேன்.

இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.கதிரேசனுடன் நான் செய்துகொண்ட ஒப்பந்தப்படி, இந்தி மொழிமாற்று உரிமத்தில் 40% எனக்கு தரவேண்டும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால், சமீபத்தில் கதிரேசன் எனக்கு தெரியாமல் இந்த திரைப்படத்தின் உரிமையை விற்க முயல்வதாக அறிந்தேன்.

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தில் இந்தப் பிரச்சினையை பதிவு செய்தேன். மேலும், இந்த பிரச்சினையை நான்கு சுவற்றுக்குள் முடிக்க, தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பல முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது.

ஆனால், கதிரேசனின் ஒத்துழையாமையால் சுமூக முடிவுக்கு வர முடியாமல் போனது. பின்னர், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தின் ஆலோசனையோடு, வேறு வழியில்லாமல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தேன்.

தற்போது சென்னை உயர் நீதிமன்றம் 'ஜிகர்தண்டா' திரைப்படத்தின் மொழிமாற்று உரிமத்தை விற்பதற்குத் தடை விதித்துள்ளது'' என்றார் கார்த்திக் சுப்புராஜ்.

இது தொடர்பாக கார்த்திக் சுப்புராஜின் வழக்கறிஞர் கொடுத்துள்ள அறிக்கையில், ''சென்னை உயர் நீதிமன்றம் 21, மே 2015 அன்று கார்த்திக் சுப்புராஜ் எழுதி, இயக்கிய, சித்தார்த், லட்சுமி மேனன் நடித்த, பல கோடி வசூல் செய்த 'ஜிகர்தண்டா' திரைப்படத்தின் மொழிமாற்று உரிமையை விற்க தடை விதித்துள்ளது.

இந்த தடை 11, ஜூன் 2015 வரை, கார்த்திக் சுப்புராஜ் பைவ் ஸ்டார் தனியார் திரைப்பட நிறுவன அதிபர் கதிரேசன் மேல் கொடுத்த ஒப்பந்த மீறல் மற்றும் பதிப்புரிமை மீறல் புகாரின் பேரில் விதிக்கப்பட்டுள்ளது.

பணம் கொடுக்கல் விதி மற்றும் ஒப்பந்த மீறல் காரணமாக விளையக்கூடிய பதிப்புரிமை மீறலின் மேல் கார்த்திக் சுப்புராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில், நீதிபதி ர.மாதவன் இந்த இடைக்கால தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

ஜூன் 11, 2015 வரை 'ஜிகர்தண்டா' திரைப்படத்தின் பிற மொழி உரிமத்தை விற்கவோ, விளம்பரப்படுத்தி இந்தி மற்றும் ஏனைய மொழிகளில் விற்க முயற்சிக்கவோ கூடாது என்று தடை உத்தரவு பிறப்பித்ததோடு, தயாரிப்பாளருக்கும் தடை உத்தரவை அனுப்பி, அவர்கள் தரப்பு பதிலையும் கோரியுள்ளார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x