Last Updated : 29 May, 2015 11:58 AM

 

Published : 29 May 2015 11:58 AM
Last Updated : 29 May 2015 11:58 AM

ஹாலிவுட் இணையாக புலியில் சண்டைக் காட்சிகள்: சூப்பர் சுப்பராயன்

சண்டைக் காட்சிகளுக்கும் மட்டும் 84 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி இருக்கிறோம் என 'புலி' படத்தின் சண்டை இயக்குநர் சூப்பர் சுப்புராயன் தெரிவித்துள்ளார்.

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'புலி'. ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், சுதீப் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் விஜய்யோடு நடித்து வருகிறார்கள். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து வரும் இப்படத்துக்கு நட்ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். பி.டி.செல்வகுமார் மற்றும் தமீன் பிலிம்ஸ் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.

விஜய் பிறந்தநாளன்று 'புலி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும், சரஸ்வதி பூஜை விடுமுறைகளை கணக்கில் கொண்டு படமும் வெளிக் கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில் 'புலி' படத்தின் சண்டைக் காட்சிகள் குறித்து அப்படத்தில் பணியாற்றியுள்ள சூப்பர் சுப்புராயன் தெரிவித்திருப்பது:

"இந்திய சினிமாவுல சண்டைக்காட்சிகள் ரசிகர்களை ஏமாற்றும் விதமாகத்தான் இன்றளவும் இருக்கிறது, ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டேயிருக்கிறது.

எங்களை மாதிரி ஸ்டன்ட் ஆட்கள் ஒரு படத்தில ஒரு ஆக்‌ஷன் காட்சி எடுக்க வேண்டும் என்றால், அது அந்த கதையை மீறாத ஒரு சண்டைக்காட்சியாகத்தான் எடுக்க வேண்டியிருக்கிறது. ஹாலிவுட்டில் வருவது போல எங்களால் சண்டைக் காட்சிகள் எடுக்க முடியும். அந்தளவுக்கு திறமையும் எங்களிடம் இருக்கிறது. அதைத்தான் தற்போது விஜய் நடித்துக் கொண்டிருக்கும் 'புலி’ படத்தில் செய்திருக்கிறோம்.

'புலி' படத்தில் சண்டைக் காட்சிகளுக்கு மட்டும் 84 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். இப்படத்தில் வரும் சண்டைக் காட்சிகள் தத்ரூபமாக இருக்கும். அதை நீங்கள் திரையரங்கில் பார்த்தால் தெரியும்" என்று சூப்பர் சுப்புராயன் தெரிவித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x