Published : 01 Apr 2015 01:07 PM
Last Updated : 01 Apr 2015 01:07 PM

கொம்பன் ரிலீஸ் திடீர் தள்ளிவைப்பு

'கொம்பன்' திரைப்படம் இன்று (ஏப்ரல் 1) வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், திடீரென ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.

நடிகர் கார்த்தி நடித்துள்ள கொம்பன் படத்துக்கு தடை கோரி, புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கே. கிருஷ்ணசாமி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், கொம்பன் படம் வெளியானால் தென் தமிழகத்தில் ஜாதி மோதல் ஏற்படும் என்றும், எனவே, ஏப். 2-ல் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, கொம்பன் திரைப்படத்தை ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் ரவிராஜபாண்டியன், ஆறுமுகப்பெருமாள் ஆதித்தன் மற்றும் வழக்கறிஞர்கள் பார்வையிட்டு, அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து, இந்த வழக்கு நீதிபதிகள் எஸ். தமிழ்வாணன், வி.எஸ். ரவி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

டாக்டர் கிருஷ்ணசாமி ஆஜரானார். அவரது தரப்பு வழக்கறிஞர்கள் பீட்டர் ரமேஷ்குமார், பாஸ்கர் மதுரம் ஆகியோர் வாதிடும்போது, எங்களை 3 நிமிடங்கள் மட்டுமே படத்தை பார்க்கவிட்டனர்.

அந்த 3 நிமிடத்திலும் ஆட்சேபகரமான வசனங்கள், காட்சிகள் இருந்தன. படத்துக்கு தணிக்கை வாரியம் விடுமுறை நாளில் சான்றிதழ் வழங்கியது தவறு. படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றனர்.

தயாரிப்பாளர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விடுதலை, ஓய்வு பெற்ற நீதிபதிகளை படத்தை பார்க்கவிடாமல் மனுதாரர் தரப்பினர் அநாகரீகமாக நடந்து கொண்டனர். இதனால் நீதிபதிகள் படத்தை முழுமையாக பார்க்காமல் வெளியேறி விட்டனர் என்றார்.

இயக்குநர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர். காந்தி, தணிக்கை வாரியம் படத்தை முழுமையாக பார்த்த பிறகே சான்றிதழ் வழங்கியுள்ளது. மனுதாரர் தரப்பினரோ, நீதிபதிகளோ படத்தை முழுமையாக பார்க்கவில்லை. கதை, கதாபாத்திரங்கள் கற்பனையானது என திரையிட்ட பிறகே படம் தொடங்குகிறது என்றார்.

தணிக்கை வாரியத்தின் வழக்கறிஞர் லட்சுமணன் வாதிடும்போது, சட்டத்துக்கு உட்பட்டுதான் தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஆட்சேபகரமான காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன என்றார். இதையடுத்து, கொம்பன் வழக்கில் இன்று பிற்பகல் தீர்ப்பளிக்கப்படும் என நீதிபதிகள் அறிவித்தனர்.

இதனிடையே, ஏற்கெனவே அறிவித்தபடி இன்று கொம்பன் படம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தியேட்டர்கள் திடீரென காட்சிகளை ரத்து செய்துவிட்டு, முன்பதிவு செய்தவர்களுக்கு பணத்தை திருப்பி அளித்து வருகின்றன.

கொம்பன் படம் தொடர்பான தீர்ப்பு வெளியான பிறகே படத்தை ரிலீஸ் செய்வது என தியேட்டர்கள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

பிந்தைய அப்டேட்: கார்த்தி நடித்துள்ள கொம்பன் படத்துக்கு தடை விதிக்க, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மறுத்துவிட்டது. இப்படத்தை வெளியிடத் தடை இல்லை என உத்தரவு பிறப்பித்தது. | விவரம்>'கொம்பன்' படத்துக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x