Last Updated : 20 Jan, 2015 06:53 PM

 

Published : 20 Jan 2015 06:53 PM
Last Updated : 20 Jan 2015 06:53 PM

மருதநாயகம், வாமமார்க்கம் முயற்சிகள்: கமல் புதிய தகவல்

'மருதநாயகம்' படம் மீண்டும் எடுப்பதற்கான முயற்சிகள் நடக்கிறது. 'வாமமார்க்கம்' என்பது தமிழ் டைட்டில் இல்லைதான். இனி உலகத்தை நோக்கிப் பயணிக்க வேண்டிய நேரம் தமிழனுக்கு வந்துவிட்டது என கமல்ஹாசன் கூறியுள்ளார்.

இதுகுறித்து ஒரு வீடியோ பதிவை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். அதில் கமல் கூறியிருப்பதாவது:

'' 'மருதநாயகம்', 'வாமமார்க்கம்' இரண்டும் வேற வேறவா? ஒரே படமா? கதை என்ன? என்று கேட்கிறார்கள். இரண்டு கதைகளையும் சொல்ல முடியாது.

'மருதநாயகம்' கதையை நான் சொல்லவில்லை என்றாலும், படித்துத் தெரிந்து கொள்ளலாம். ஆனால், அதை நான் எப்படி சொல்லப்போகிறேன் என்பதுதான் வித்தியாசம். 'மருதநாயகம்' படம் மீண்டும் துளிர்ப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நான் ஒரு பேட்டியில் சொன்னதால், அது இப்போது சூடு கிளம்பி இருக்கிறது.

'காந்தி, நேருன்னா தெரியும். மருதநாயகம்னா தெரியுமா? மருதநாயகம்ங்கிற பேரை மக்கள் கிட்ட கொண்டுபோய் சேர்க்க முடியுமா?'ன்னு என் நண்பர் பி.சி ஸ்ரீராம் கேட்டார்.

படம் எடுத்து முடிக்கும்போது அது ஹவுஸ் ஹோல்டு பெயரா இருக்கும். ஆனா, படம் எடுத்து முடிக்கலை. அதுக்குள்ள ஹவுஸ் ஹோல்டு பெயராகிவிட்டது.

நான் செய்ய வேண்டிய கடமை 'மருதநாயகம்' படத்தை விரைவில் திரைக்குக் கொண்டுவர முயற்சிக்க வேண்டும். ஒருவர் என்னிடம் போனில் அழைத்து 'மருதநாயகம்' தயாரிக்க ஆசை என்று சொல்லியிருக்கிறார். பெயரையும், தேதியையும் இப்போது சொல்லக்கூடாது.

'வாமமார்க்கம்' என்பது எனக்கு ரொம்பப் பிடித்த கதை. சர்வதேச தரத்தில் இருக்கும். 'வாமமார்க்கம்' என்பது தமிழ் டைட்டில் இல்லைதான். இனி உலகத்தை நோக்கிப் பயணிக்க வேண்டிய நேரம் தமிழனுக்கு வந்துவிட்டது.

ஷேக்ஸ்பியரை ஷேக்ஸ்பியர்னுதான் சொல்லணும். அதுக்கு தமிழாக்கம் கண்டுபிடிக்கக் கூடாது. ராபர்ட் கிளைவ் இந்தியாவுக்கு வந்த கதையை படமாக எடுக்கிறேன் என்றால் ராபர்ட் கிளைவ் என்றுதான் பெயர் வைக்கவேண்டும். அதற்கு தமிழில் பெயர் வைக்கக்கூடாது.

இதை சொல்லி புரிய வைக்கும் சூழல்தான் இல்லாமல் இருக்கிறது. விரைவில் வரும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.'' என்று கமல் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x