Published : 01 Dec 2014 09:55 AM
Last Updated : 01 Dec 2014 09:55 AM

ரூ.10 கோடி தர மறுப்பு: கோச்சடையான் தயாரிப்பாளர் முரளிமனோகர், லதா ரஜினிகாந்த் மீது விநியோகஸ்தர் புகார்

திரைப்பட விநியோகஸ்தர் அபிர்சந்த் நாகர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘கோச்சடையான்’ திரைப்படம் கடந்த மே மாதம் வெளியானது. இப்படத்தின் தமிழக உரிமையை அதன் தயாரிப்பாளர் முரளி மனோகர், கடந்த ஏப்ரல் 25-ம் தேதி எனது நிறுவனத்துக்கு அளித்தார். இதற்கான ஒப்பந்தத்தில் நானும், முரளி மனோகரும் கையெழுத்திட்டோம். இதற்கு நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் உத்தரவாத கையெழுத்திட்டார்.

அதைத் தொடர்ந்து ‘கோச்சடையான்’ திரைப்படத்தின் தமிழக உரிமத்துக்குரிய தொகையை முரளி மனோகருக்கு நான் கொடுத்தேன். “தமிழகத்தில் ‘கோச்சடையான்’ திரைப்படத்தின் உரிமையை வேறு யாருக்கும் அளிக்கக்கூடாது. அதைமீறி யாருக்காவது உரிமை அளித்தால், எனக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். அதாவது விற்பனைத் தொகையில் 20 சதவீதமும், லாபத்தில் பங்கும் அளிக்க வேண்டும்” என்று அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், அந்த ஒப்பந்ததை மீறி வேறு ஒரு நிறுவனத்துக்கு அனைத்து உரிமைகளையும் முரளி மனோகர் விற்றார். இதையடுத்து நான் அவர்களிடம் எனக்குரிய நஷ்ட ஈட்டுத் தொகையைக் கேட்டேன். அதற்கு லதா ரஜினி காந்தும், முரளி மனோகரும் படம் வெளியானதும் அந்தத் தொகையைத் தருவதாக என்னிடம் உறுதி அளித்தனர். நம்பிக்கையின் அடிப்படையில் திரைப்படத்தை வெளியிட அனுமதி அளித்தேன். ஆனால் படம் வெளியாகி ஓடி பல மாதங்கள் கடந்த பின்னரும், அவர்கள் எனக்குத் தர வேண்டிய ரூ. 10 கோடியைத் தரவில்லை.

பலமுறை கேட்டும், பணத்தைத் தராமல் இழுத்தடிக் கின்றனர். எனவே லதா ரஜினிகாந்த், முரளி மனோகர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து எனக்கு கொடுக்க வேண்டிய பணத்தை பெற்றுத்தர வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x