Published : 10 Dec 2014 04:17 PM
Last Updated : 10 Dec 2014 04:17 PM
ஒரு நாள் ரஜினிகாந்தை இயக்குவார் ஐஸ்வர்யா தனுஷ் என்று 'வை ராஜா வை' இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விவேக் தெரிவித்தார்
ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் கெளதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த், டாப்ஸி, விவேக், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'வை ராஜா வை' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது.
இசை வெளியீட்டு விழாவில் வழக்கமான நிகழ்ச்சி தொகுப்பாளர், சேர்கள் போட்டு வந்திருக்கும் விருந்தனர்களை அமர வைத்து படத்தைப் பற்றி பேச வைப்பது என்று எதுவும் இல்லாமல் புதுமையாக இருந்தது.
ரஜினிகாந்த், வைரமுத்து, இளையராஜா, கார்த்திக், இளையராஜா ஆகியோர் பேசி வீடியோ பதிவு ஒளிபரப்பப்பட்டது.
அந்த வீடியோ பதிவில் ரஜினிகாந்த் பேசியது:
"ஐஸ்வர்யா தனது முதல் படத்தை ஆர்ட் பிலிமாக இயக்கி இருந்தார். அப்போதே என்னிடம் ஒரு ஆக்ஷன் த்ரில்லர் கதை இயக்க திட்டம் வைத்திருப்பதாக கூறினார். அது 'வை ராஜா வை' மூலம் நிறைவேறி இருக்கிறது. நான் யுவனின் இசைக்கு பெரிய ரசிகன். 'பருத்தி வீரன்' முதல் 'பில்லா' வரை பல வகையான பாடல்களை கொடுத்திருக்கிறார். 'வை ராஜா வை' படத்தின் பாடல்களைக் கேட்டேன். தனித்துவமாக இருந்தது. படக்குழுவிற்கு என் வாழ்த்துகள்" என்றார்.
'தாரை தப்பட்டை' படப்பிடிப்பிற்கு இடையே இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட இயக்குநர் பாலா பேசும்போது, "ஐஸ்வர்யா தனக்கு என்ன வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார். என்னை இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு வர வேண்டும் என்று அழைத்தார். அச்சமயத்தில் 200 துணை நடிகர்களுடன் படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்தேன். தன்னைக் கண்டிப்பாக வர வேண்டும் என்றார். அதனால் இங்கு இருக்கிறேன். தனக்கு என்ன வேண்டும் என்பதில் ஒரு இயக்குநர் பிடிவாதமாக இருக்க வேண்டும். ஐஸ்வர்யாவிடம் அது இருக்கிறது" என்றார்.
நடிகர் விவேக் பேசும்போது, "ஐஸ்வர்யாவின் முதல் படம் லாப நோக்கு இல்லாமல் இருந்தது. 'வை ராஜா வை' கண்டிப்பாக கே.எஸ்.ரவிகுமார் மாதிரி ஒரு நல்ல கமர்ஷியல் இயக்குநராக முன்னிறுத்தும். ஒரு நாள் ஐஸ்வர்யா, ரஜினிகாந்தை இயக்கினாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT