Published : 11 Dec 2014 11:14 AM
Last Updated : 11 Dec 2014 11:14 AM

ரகசியமாக நடந்த நடிகர் வடிவேலு மகன் திருமணம்

எளியவர் வீட்டு காது குத்துக்கே களை கட்டும் மதுரையில், நடிகர் வடிவேலுவின் ஒரே மகனின் திருமணம் விளம்பரமின்றி மிக எளிமையாக நடந்தது. அழைப்பில்லாததால் சினிமா நட்சத்திரங்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.

நகைச்சுவை நடிகர் வடிவேலுவுக்கு கன்னிகா பரமேஸ்வரி, கார்த்திகா, கலைவாணி ஆகிய மகள்களும், வி.சுப்பிரமணி என்ற மகனும் உள்ளனர். மகன் வி.சுப்பிரமணி, திருப்புவனத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி வி. புவனேஸ்வரி ஆகியோரின் திருமணம், மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நேற்று காலையில் நடந்தது.

திருமணத்தில் வடிவேலுவின் தாயார் சரோஜினி அம்மாள், இரண்டு அக்காள்கள், 3 தம்பிகள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். நெருங்கிய உறவினர்கள் தவிர வேறு யாரும் அழைக்கப்படாததாலும், திருமணம் ரகசியமாக நடைபெற்றதாலும் சினிமா மற்றும் அரசியல் பிரமுகர்களையோ, ரசிகர்களையோ விழாவில் பார்க்க முடியவில்லை. 1000 இருக்கைகள் கொண்ட அந்த மண்டபத்தில் பல இருக்கைகள் காலியாகக் கிடந்தன.

போஸ்டர், பிளக்ஸ் எதுவுமே இல்லாததால், மதுரை நகரின் மையத்தில் நடந்த இந்தத் திருமணம் பற்றிய தகவல் மக்களையும் எட்டவில்லை. சினிமா துறையில் இருந்து வடிவேலுவின் அடுத்த பட இயக்குநரான யுவராஜ் மட்டும் வந்திருந்தார்.

திருமணம் எளிமையாக நடைபெற்றது குறித்து வடிவேலுவின் உறவினர் ஒருவரிடம் கேட்டபோது, “அவருக்கு எல்லாருமே வேண்டியவர்கள் தான். சினிமாக்காரர்களை அழைத்தால், அரசியல் புள்ளிகளையும் அழைக்க வேண்டியது இருக்கும் என்பதால், நெருங்கிய உறவினர்களை மட்டுமே அழைத்துள்ளார். வெறுமனே 500 பத்திரிகைகள் மட்டுமே அடித்து கொடுத்தார். வேறு யாரிடமும் சொல்ல வேண்டாம் உங்களை மட்டும் தான் அழைத்திருக்கிறோம் என்று வடிவேலு குடும்பத்தினர் கேட்டுக் கொண்டதால் நாங்களும் போஸ்டர், பிளக்ஸ் என்று விளம்பரப்படுத்தவில்லை என்றார்.

கடந்த 7.4.13 அன்று வடிவேலுவின் மூத்த மகள் கன்னிகா பரமேஸ்வரியின் திருமணம் மதுரை புறநகர் பகுதியில் நடந்தது. பிரபலங்களை அழைக்காதது பற்றி அவரிடம் கேட்டபோது, ‘மகன் கல்யாணத்தை தடபுடலா நடத்திடுவோம்’ என்றார். ஆனால், மகள் திருமண செலவில் நான்கில் ஒரு பங்கு செலவில் மிக மிக எளிமையாக மகன் திருமணத்தை நடத்திவிட்டார் வடிவேலு என்றார்.

வடிவேலுவை நெருங்கி ‘அண்ணே பேட்டி?’ என்றோம். “வேட்டி கிழியிற அளவுக்கு வேலை இருக்கு. பேட்டியா? என்று நகைச்சுவையாக சொல்லிவிட்டு நகர்ந்தார் வடிவேலு.

மண்டபத்தில் புகுந்த போலீஸ்!

வடிவேலுவின் மகன் திருமணம் நடந்த மண்டபத்துக்குள் மதியம் 1 மணி அளவில் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர்களும், மகளிர் போலீஸாரும் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட சமூக நல அலுவலர் ஆனந்தவள்ளி, தல்லாகுளம் மகளிர் காவல் ஆய்வாளர் கௌசல்யா ஆகியோர் வடிவேலு மற்றும் மணமக்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையை முடித்துவிட்டு அவர்கள் கிளம்பிச் சென்ற பிறகே, வடிவேலுவின் முகத்தில் நிம்மதி தெரிந்தது.

இதுபற்றி சமூக நல அலுவலர் ஆனந்தவள்ளியிடம் கேட்டபோது, “மணமகள் புவனேஸ்வரி மைனர் பெண் என்றும், பணத்துக்காக அவரது பெற்றோர் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்கிறார்கள் என்றும் சைல்ட் ஹெல்ப் லைனுக்கு புகார் வந்திருந்தது. அதனால்தான் திருமண மண்டபத்துக்கு வந்து விசாரணை நடத்தினோம்.

சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலரைத் தொடர்பு கொண்டு, திருப்புவனம் பள்ளியில் புவனேஸ்வரியின் சான்றிதழை ஆய்வு செய்தோம். அவருக்கு 18 வயது பூர்த்தியாகி 7 மாதங்களாகிவிட்டன என்பதும், யாரோ உள்நோக்கத்துடன் புகார் செய்திருக்கிறார்கள் என்றும் தெரியவந்துள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x