Published : 18 Nov 2014 09:33 AM
Last Updated : 18 Nov 2014 09:33 AM
நடிகை த்ரிஷாவுக்கும், தொழிலதிபரும், திரைப்பட தயாரிப்பாளருமான வருண் மணியனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ் சினிமா உலகில் கடந்த பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை த்ரிஷா. ‘சாமி’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘ஆறு’, ‘மன்மதன் அம்பு’ உட்பட ஏராளமான படங்களில் நாயகியாக நடித்துள்ள அவர் தற்போது அஜித்துடன் ‘என்னை அறிந்தால்’ படத்தில் நடித்து வருகிறார். த்ரிஷாவும் தெலுங்கு நடிகர் ராணாவும் காதலித்து வந்ததாக சில மாதங்களுக்கு முன் கூறப்பட்டது.
இந்நிலையில், த்ரிஷாவுக்கும் சமீபத்தில் வெளியான ‘வாயை மூடி பேசவும்’, இயக்குநர் வசந்தபாலனின் ‘காவியத் தலைவன்’ படங்களின் தயாரிப்பாளருமான வருண் மணியனுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக ட்விட்டர் தளத்தில் புகைப்படங்களுடன் தகவல்கள் வெளியாகின.
த்ரிஷாவிற்கு நிச்சயதார்த்த தகவலால் தமிழ் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அவர்களது குடும்பத்தினரிடம் கேட்டபோது, "இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவது உண்மைதான். அதை அவர்களே அறிவிப்பார்கள்" என்றனர்.
த்ரிஷா தரப்பு என்ன சொல்கிறது?
இந்தத் தகவல்களால் பரபரப்பு நிலவி வந்த நிலையில், தன்னுடைய நிச்சயதார்த்தம் நடக்கவில்லை என்றும், அப்படி நடக்கும்போது அந்தத் தகவலை நான் தான் முதலில் வெளியிடுவேன் என்றும் ட்விட்டரில் த்ரிஷா தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், வருண் மணியன் உடனான திருமணப் பேச்சு குறித்து அவர் எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை.
இந்தச் சூழலில்தான் வருண் மணியனுடன் த்ரிஷா இருப்பது போன்ற புகைப்படம் வெளியானது.
இது குறித்து த்ரிஷாவின் தாய் உமாவை தொடர்புகொண்டபோது, "நிச்சயதார்த்த செய்தியில் உண்மையில்லை. த்ரிஷாவின் வாழ்க்கையில் ஏதாவது நடைபெற்றால் கண்டிப்பாக் கூறுகிறேன்" என்று மட்டும் தெரிவித்தார்.
என்னதான் நடந்தது?
மேலும், இது குறித்து த்ரிஷாவிற்கு நெருக்கமானவர்களிடம் பேசியபோது "த்ரிஷா - வருண்மணியன் இருவருமே காதலித்து வருகிறார்கள். விரைவில் நிச்சயதார்த்தம் நடைபெறும். மேலும், இருதரப்பு குடும்பத்தினரும் பேசிவிட்டார்கள். ஆகவே, திருமணம் செய்யப் போகிறார்கள் என்ற தகவல் உண்மையே. த்ரிஷா கையில் இருக்கும் மோதிரம், வருண் மணியன் பரிசளித்ததுதான்" என்றார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT