Published : 05 Nov 2014 12:43 PM
Last Updated : 05 Nov 2014 12:43 PM
திருட்டி விசிடி பிரச்சினை தொடர்பாக நடவடிக்கை எடுத்து வரும் நடிகர் விஷாலுக்கு பாராட்டு தெரிவித்திருக்கிறார் நடிகர் விஜய்.
தீபாவளி அன்று விஜய் நடிப்பில் 'கத்தி' மற்றும் விஷால் நடிப்பில் 'பூஜை' என இரண்டு படங்கள் மோதின. 'கத்தி' ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று ரூ.100 கோடி வசூலைத் தாண்டியது. 'பூஜை' திரைப்படமும் பி மற்றும் சி சென்டர்களில் நல்ல வசூலைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் படம் வெளிவந்த அன்றே, 'கத்தி' இணையத்தில் பதிவிறக்கம் செய்து பார்க்கும் வகையில் வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து அப்படத்தின் டி.வி.டிக்கள் கடைகளில் கிடைத்தன. சில நாட்களில் 'பூஜை' படமும் டி.வி.டிக்கள் கிடைத்தன.
படப்பிடிப்பு நடைபெறும் இடங்களில் எல்லாம் டி.வி.டி கடைகளில் தனது படங்கள் கிடைக்கிறதா என்று ஆய்வு செய்து வந்தார் விஷால். சமீபத்தில் தனது படத்தோடு 'கத்தி' படமும் வைத்திருந்த கடை உரிமையாளரை போலீஸில் ஒப்படைத்தார்.
விஷாலின் இந்த நடவடிக்கைக்கு விஜய் பாராட்டு தெரிவித்திருக்கிறார். இது குறித்து விஜய் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "விஷால்... உங்கள் செயலை எண்ணிப் பெருமிதம் கொள்கிறேன். சொற்களைவிட செயல்கள்தான் சக்தி வாய்ந்தது என்று நிரூபித்து இருக்கிறீர்கள். திருட்டு விசிடியை ஒழிப்போம்" என்று தெரிவித்தார்.
விஜய் பாராட்டுக்கு பதிலளித்துள்ள விஷால், "டியர் விஜய்... உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி. நிச்சயம் மாற்றம் நிகழும். திருட்டு விசிடியை ஒழிப்போம்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT