Published : 06 Apr 2017 07:14 PM
Last Updated : 06 Apr 2017 07:14 PM

தயாரிப்பாளர் சங்கத் தலைவராக விஷால் பதவியேற்பு: ரஜினி வாழ்த்து

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராக விஷால் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ரஜினிக்கு பூங்கொத்து அனுப்பி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு 2017 - 2019-ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஏப்ரல் 2-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ராஜேஷ்வரன் அதிகாரியாகப் பொறுப்பேற்று இந்தத் தேர்தலை நடத்தினார்.

விஷால் தலைமையில் போட்டியிட்ட 'நம்ம அணி' பெருவாரியாக வெற்றி பெற்றது. தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராக விஷால் வெற்றி பெற்றார். துணைத் தலைவர்கள் பதவிக்கு போட்டியிட்ட பிரகாஷ்ராஜ், கவுதம் மேனன் ஆகியோர் பெற்றி பெற்றனர். கவுரவ செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட ஞானவேல்ராஜா மற்றும் கதிரேசன் வெற்றி பெற்றனர். பொருளாளர் பதவிக்கு விஷால் அணியில் இருந்து போட்டியிட்ட எஸ்.ஆர்.பிரபு வெற்றி பெற்றார்.

புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு விழா சென்னையிலுள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கிய விழாவை ரோகிணி தொகுத்து வழங்கினார்.

முதலில் பேசிய எடிட்டர் மோகன் புதிய நிர்வாகிகளை மேடைக்கு அழைத்தார். அவர்களுக்கு ராஜ்கண்ணு, எஸ்.ஏ.சந்திரசேகரன், கே.டி.குஞ்சுமோகன், ராஜ்கிரண், தாணு, கேயார், ஏ.எல்.அழகப்பன், டி.சிவா ஆகியோர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களை வழங்கினர்.

அதற்குப் பிறகு, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராக விஷால் பதவியேற்றுக் கொண்டார். துணைத் தலைவர்கள், செயலாளர், பொருளாளர் ஆகியோரும் பதவியேற்றுக் கொண்டனர்.

இது தொடர்பாக ரஜினி அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் "தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற விஷால், பிரகாஷ்ராஜ், கவுதம் மேனன், எஸ்.ஆர்.பிரபு, ஞானவேல்ராஜா, கதிரேசன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். தயாரிப்பாளர்கள் தேவைகளை பூர்த்தி செய்ய அந்த கடவுள் உங்களுக்கு துணை புரிவார். என்னுடைய வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார் ரஜினி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x