Published : 21 Dec 2018 12:51 PM
Last Updated : 21 Dec 2018 12:51 PM

விஸ்வாசம் தூக்குதுரைக்காக ரசிகரின் ஓப்பனிங் பாடல்; அசரடிக்கும் வரிகள்- கொண்டாடும் தல ரசிகர்கள்

 

 

 

'விஸ்வாசம்'  தூக்குதுரைக்காக இலங்கையைச் சேர்ந்த கவிஞர் அஸ்மினும் இசையமைப்பாளர்  தஜ்மீல் ஷெரீபும் இணைந்து வெளியிட்டுள்ள ஓப்பனிங் பாடல், தல ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

அஜித் நடிப்பில், சிவா இயக்கியுள்ள படம் ‘விஸ்வாசம்’. நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில் விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இமான் இசையமைத்திருக்கிறார்.

 

சத்யஜோதி நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. ரஜினி நடித்த 'பேட்ட' படத்துடன் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. முன்னதாக இப்படத்தின் 'அடிச்சுத் தூக்கு' என்ற ஓப்பனிங் பாடல் இணையத்தில் வெளியானது. இதற்குக் கலவையான விமர்சனங்கள் எழுந்தன.

 

இந்நிலையில் தூக்குதுரைக்காக ஓப்பனிங் சாங் ஒன்றை எழுதித் தனது ஃபேஸ்புக்கில் வெளியிட்டார் இலங்கையைச் சேர்ந்த கவிஞர் அஸ்மின். அவரின் வரிகளை அஜித் ரசிகர்கள் கொண்டாடித் தீர்க்க, அதை முறையாக இசையமைத்துப் பாடலாக வெளியிட முடிவு செய்தார் அஸ்மின்.

 

ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக் கல்லூரியில் மாணவர்களுக்கு பியானோ கற்பித்து வரும்  இசையமைப்பாளர் தஜ்மீல் ஷெரீப் இப்பாடலுக்கு இசையமைத்தார். அஜித் ரசிகர்களுக்குப் பிடிக்கும் வகையில் மாஸான வரிகளோடு வெளியாகியுள்ள இப்பாடலை, ஏராளமானோர் கொண்டாடி வருகின்றனர்.

 

படத்தில் உள்ள 'அடிச்சுத் தூக்கு' பாடலுக்கு பதிலாக, இந்தப் பாடலையே படத்தில் பயன்படுத்த வேண்டும் என்று அஜித் ரசிகர்கள் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.

 

யார் இந்த அஸ்மின்?

இலங்கையைச் சேர்ந்த கவிஞர் அஸ்மின், அந்நாட்டு தேசிய விருது பெற்றவர். விஜய் ஆண்டனி நடித்த 'நான்' படத்தில் 'தப்பெல்லாம் தப்பே இல்லை' என்ற பாடலை எழுதியவர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்தபோது, இவர் எழுதிய 'வானே இடிந்ததம்மா'  பாடல், பலராலும் பாடப்பட்டு பகிரப்பட்டது. தற்போது அஜித்துக்காக ஒரு மணிநேரத்தில் முழுப்பாடலையும் எழுதியுள்ளார்.

பாடலைக் கேட்க

அஸ்மினின் பாடல் வரிகள்

 

தூக்குத்தொர பேரக்கேட்டா

வாயப்பொத்தும் நெருப்பு

தூக்கிவச்சி கொஞ்ச சொல்லும்

பச்சபுள்ள சிரிப்பு

 

அவர் வேட்டிகட்டி வந்து நின்னா

வேட்டிக்குத்தான் மதிப்பு -நான்

பாட்டில் வச்சி பாட வந்தேன்

எங்க பாண்டியரின் சிறப்பு...

 

பட்டாக் கத்தி பளபளக்க

பட்டி தொட்டி பரபரக்க

எட்டுவச்சு வச்சு வர்றாரு பாரு

எதிரி ஆகப்போறான் சுக்குநூறு...

 

கெட்டதெல்லாம் கருவறுக்க

தொட்டதெல்லாம் தூள்பறக்க..

முட்டி முட்டி மொளச்சாரு

தல வாழ்ந்து வரும் வரலாறு..

 

சோழமன்னன் வந்து மதுரயில பொறந்தான்

சோகம் ஓடிருச்சு எமக்கிவன் வரந்தான்

ஏழமக்களுக்கு அள்ளி அள்ளி அளந்தான்

எம்ஜிஆரு போல எங்க நெஞ்சில் கலந்தான்

 

தன்னாலே வந்து இவன் தலையெடுத்தான்-ஒரு

கண்ணாலே எதிரிகளின் கதமுடிப்பான்-வானம்

அண்ணாந்து பார்க்கும் இவன் பூமொகத்த-பூமி

கொண்டாடித்தீர்க்கும் இவன் தைரியத்த...

 

பலபேரு இருந்தாலும் தல கொஞ்சம் வித்தியாசம்

அதனால எல்லோரும் இவன் மேலே விஸ்வாசம்..

 

ஒருநாள் தமிழ்நாடு இவனால் உருமாறும்

தல பேரச் சொல்லிமுழு தமிழ்நாடும் கொண்டாடும்.

 

தல மகன் பிறந்தான் தமிழ் வழி நடந்தான்-எங்கள்

உயிரிலும் மனதிலும் அமர்ந்தான்..

 

 

*இருக்குதிருட்டு*

*வெறுக்கும் திருட்டு*

*அறுக்கும் புரட்டு*

*அடித்து விரட்டு*

*எடக்கும் முடக்கு*

*நடக்கும் பொழுது*

*இருக்கும் உனது*

*விழியில் நெருப்பு*

*பொறுத்து பொறுத்து* *இருப்பதெதற்கு*

*எடுத்து பிடித்து*

*தடுத்து நிறுத்து*

*தலையின் மனது*

*கடலில் பெரிது*

*தலைபோலிங்கு*

*இருப்ப தரிது*

*எம் உலகும் உனது* *உணர்வும் உனது*

*உறவும் உனது*

*உயிரும் உனது*

 

தொட்டுத்தொட்டு நீயுரச

கொட்டிக்குவ வாய்க்கரிச

பட்டம் கேட்டு நின்னாரா பாரு?

தல அதனாலதான் சூப்பஸ்டாரு...

 

பட்டுப்புட்டா சொல்லுவாரு

கெட்டுப்பட்டா தள்ளுவாரு

வெட்டவெட்ட எழுந்தாரு...

தல கட்டி வச்ச காட்டாறு...

 

புகழ விரும்பாதது அவரது குணம்தான்

உலகே கொண்டாடுது தலையென தினந்தான்

உதவி செய்தாலுமே மறைத்திடும் மனந்தான்

உயர்வாய் போற்றுகிறார் பகைவருந்தான்

 

அன்பால வந்துஇவன் அரவணைச்சான்-நம்ம

அண்ணாவைப் போல நெஞ்ச அபகரிச்சான்

எல்லோரும் இவன் பின்னே படையெடுப்போம்

எங்கள் அண்ணாவுக்காய் என்றும் உயிர்கொடுப்போம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x