Published : 23 Mar 2025 01:05 PM
Last Updated : 23 Mar 2025 01:05 PM
2026-ல் தான் விஜய் நடித்து வரும் ‘ஜனநாயகன்’ வெளியாகவுள்ளது. இதற்கான காரணம் என்னவென்று தெரியவந்துள்ளது.
’ஜனநாயகன்’ படத்தில் விஜய் நடித்து வரும் காட்சிகளின் படப்பிடிப்பு மே மாதத்துடன் முடிவடையவுள்ளது. அதற்குப் பிறகு முழுமையாக அரசியலில் கவனம் செலுத்தவுள்ளார் விஜய். இதனிடையே, ‘ஜனநாயகன்’ அக்டோபரில் வெளியீடு என்று படக்குழுவினர் போஸ்டர்களில் குறிப்பிட்டு இருந்தார்கள். ஆனால், தற்போது அதற்கு சாத்தியமில்லை என்பது உறுதியாகி இருக்கிறது.
2026 பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவுள்ளது ‘ஜனநாயகன்’. இப்படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்றியுள்ளது ஃநெட்ப்ளிக்ஸ் நிறுவனம். இந்நிறுவனம் இந்தாண்டு வெளியீட்டிற்கான அனைத்து படங்களையும் முடிவு செய்துவிட்டது. இதனால் அடுத்த ஆண்டு வெளியீடு என முடிவு செய்தால், ஓடிடி உரிமையினை வாங்கிக் கொள்வதாக கூறி இருக்கிறது. இதனால் இந்த முடிவினை எடுத்துள்ளது ‘ஜனநாயகன்’ படக்குழு.
ஃநெட்ப்ளிக்ஸ் நிறுவனத்துடனான ஓடிடி ஓப்பந்தம் விரைவில் கையெழுத்தாக இருக்கிறது. தற்போதைய சூழலில் ஓடிடி உரிமை விற்பனை என்பது மிகவும் கடினமாக இருக்கிறது. இதனால் ஓடிடி உரிமை விற்கப்பட்டு, அடுத்த ஆண்டு வெளியீடு என்றாலும் பிரச்சினையில்லை என்ற முடிவினை எடுத்துள்ளது ‘ஜனநாயகன்’ படக்குழு.
விஜய் படத்துக்கே இது தான் நிலை என்பது உறுதியாகி இருக்கிறது. மேலும், தற்போது ஓடிடி நிறுவனங்கள் தான் படத்தின் வெளியீட்டை உறுதிச் செய்கிறது என்ற தகவலும் இதன் மூலம் மீண்டும் நிரூபணமாகி இருக்கிறது.
கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜனநாயகன்’. ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், பாபி தியோல், கவுதம் மேனன், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...