Published : 19 Oct 2024 03:51 PM
Last Updated : 19 Oct 2024 03:51 PM

தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு: இருவரும் ஆஜராகாததால் விசாரணை தள்ளிவைப்பு

சென்னை: நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கில் இருவரும் ஆஜராகாததால் வழக்கின் விசாரணையை சென்னை குடும்ப நல நீதிமன்றம் வரும் நவ. 2-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், நடிகர் தனுஷூம் காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2004-ம் ஆண்டு நவ.18 அன்று சென்னையில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்கின்றனர். இதனிடையே, கடந்த 2022-ம் ஆண்டு இருவரும் பிரிந்து விட்டதாக சமூகவலைதளத்தில் அறிவித்தனர்.

இந்நிலையில், பரஸ்பரம் விவாகரத்து கோரி இருவரும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில், கடந்த 2004-ம் ஆண்டு நடைபெற்ற தங்களது திருமணம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என கோரியிருந்தனர். இந்த மனு சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் நீதிபதி சுபாதேவி முன்பாக இன்று (அக்.19) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் ஆஜராகவில்லை. இதையடுத்து நீதிபதி, இந்த வழக்கின் விசாரணையை வரும் நவ. 2-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x