Published : 14 Oct 2024 06:13 PM
Last Updated : 14 Oct 2024 06:13 PM

‘வேட்டையன்’ ரூ.240 கோடி வசூல்: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: ரஜினி நடித்துள்ள ‘வேட்டையன்’ திரைப்படம் உலக அளவில் ரூ.240 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

போலீஸ் என்கவுன்டருக்கு எதிராகவும், நீட் தேர்வு, கோச்சிங் சென்டர்களின் அராஜகத்தையும் கேள்வி எழுப்பியிருக்கிறது ரஜினியின் ‘வேட்டையன்’. படத்தின் கன்டென்ட் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால், ரஜினிக்கான மாஸ் காட்சிகள் செயற்கையாக உள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. இருப்பினும் த.செ.ஞானவேல் இயக்கத்தில் கடந்த அக்.10-ம் தேதி வெளியான ‘வேட்டையன்’ 2 நாட்களில் ரூ.100 கோடியை வசூலித்தது. மஞ்சு வாரியர், ராணா, ஃபஹத் பாசில், அமிதாப் பச்சன், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் பட்ஜெட் ரூ.250 கோடி என கூறப்படுகிறது. ரஜினியின் முந்தைய படமான ‘ஜெயிலர்’ ரூ.600 கோடியை வசூலித்ததாக தகவல் வெளியானது.

அந்த வகையில் ‘வேட்டையன்’ ரூ.500 கோடியை தொடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. காரணம் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதாலும், அடுத்து தீபாவளிக்கு படங்கள் வெளியாக உள்ள நிலையிலும், இது ரஜினி படத்தின் வசூலை பாதிக்கலாம் என திரை வர்த்தகர்கள் கணித்துள்ளனர். இருப்பினும் ஆயுத பூஜை விடுமுறை தினங்களில் வெளியான இப்படம் 4 நாட்களில் ரூ.240 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக படத்தை தயாரித்த லைகா நிறுவனம் அதிகாரபூர்வமாக தற்போது அறிவித்துள்ளது. ரஜினி அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ’கூலி’ படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் புதன்கிழமை தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x