Published : 08 Oct 2024 04:00 PM
Last Updated : 08 Oct 2024 04:00 PM

“முள்ளும் மலரும் பட ரஜினி கதாபாத்திரத்துக்கு நிகரான நடிப்பு” -  ‘வேட்டையன்’ குறித்து இயக்குநர் பகிர்வு

சென்னை: “நட்சத்திர அந்தஸ்தை தாண்டி ரஜினியின் நடிப்பு திறனை இந்தப் படத்தில் பயன்படுத்தியிருக்கிறேன். நடிப்பை கோரும் கதாபாத்திரம் என்பதால், ‘முள்ளும் மலரும்’ படத்தின் நிழலாக ரஜினியின் நடிப்பை இந்தப் படத்தில் நீங்கள் பார்க்கலாம்” என ‘வேட்டையன்’ படம் குறித்து இயக்குநர் ஞானவேல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அண்மையில் அவர் அளித்த பேட்டியில், “எனக்கு மிகவும் பிடித்த படம் ‘முள்ளும் மலரும்’. திரும்ப திரும்ப அந்தப் படத்தை பார்த்துக் கொண்டிருப்பேன். இயக்குநர் மகேந்திரன் என்னுடைய ஃபேவரைட் இயக்குநர். ரஜினியின் திரைப்பயணத்தில் ‘முள்ளும் மலரும்’ படத்தின் காளி கதாபாத்திரம் மிகவும் முக்கியமான ஒன்று. நட்சத்திர நடிகர் என்பதைத் தாண்டி ரஜினிகாந்திடம் சிறப்பான நடிப்பு திறமை உண்டு.அந்தப் படத்தில் வரும் ‘கெட்டப்பய’ என்ற வார்த்தையை பாடலில் எங்கையாவது வைக்க வேண்டும் என்று அனிருத்திடம் நான் கூறினேன்.

அப்படித்தான் ‘ஹன்டர் வந்துட்டார்’ பாடலில் ‘கெட்டப் பய சார்’ என்ற ஒரு வரியை சேர்த்திருப்போம். அதன்படி நட்சத்திர அந்தஸ்தை தாண்டி ரஜினியின் நடிப்பு திறனை இந்தப் படத்தில் பயன்படுத்தியிருக்கிறேன். நடிப்பை கோரும் கதாபாத்திரம் என்பதால், ‘முள்ளும் மலரும்’ படத்தின் நிழலாக ரஜினியின் நடிப்பை இந்தப் படத்தில் நீங்கள் பார்க்கலாம்” என்றார். படம் வரும் வியாழக்கிழமை (அக்.10) திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x