Published : 07 Oct 2024 03:22 PM
Last Updated : 07 Oct 2024 03:22 PM

“துப்பாக்கி மிகவும் கனமானது” - ‘அமரன்’ நிகழ்வில் சிவகார்த்திகேயன்

சென்னை: “துப்பாக்கி ரொம்ப ரொம்ப கனமானது. அதை பார்த்து கையாள வேண்டும்” என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். ‘தி கோட்’ படத்தில் நடிகர் விஜய் சிவகார்த்திகேயனை பார்த்து ‘துப்பாக்கியை புடிங்க’ என்று விஜய் வசனம் பேசியிருப்பார். இதன் மூலம் விஜய்க்கு அடுத்தபடியாக சிவகார்த்திகேயன் என்ற சமூக வலைதளங்களில் பேசப்படும் நிலையில், இந்தப் பேச்சு வைராகி வருகிறது.

மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்வில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள படம் ‘அமரன்’. ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள இந்தப் படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. சிவகார்த்திகேயன், சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்தப் படத்தின் அறிமுக விழாவில் நடிகர் சிவகார்த்திகேயனிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர், “இது ஒரு மிலிட்டரி படம் துப்பாக்கியின் கனம் எப்படி இருக்கு?” என கேட்டார்.

அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன் சிரித்துவிட்டு, “துப்பாக்கி எப்போதும் ரொம்ப ரொம்ப கனமானது. அதை சரியாக கையாள வேண்டும். அதை முடிந்த அளவுக்கு சரியாக கையாண்டிருக்கிறோம் என நினைக்கிறேன். அதற்கான தைரியத்தை கொடுக்க எங்களுக்கு கமல்ஹாசன் இருக்கிறார். இந்த கதையை நான் தேர்ந்தெடுத்தாக நான் நினைக்கவில்லை. இந்த கதை தான் என்னை தேர்ந்தெடுத்துள்ளது. இதனை முக்கியமான பொறுப்பாக கருதி, கடினமான உழைப்பை கொடுத்துள்ளோம்” என்றார்.

நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'தி கோட்' படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். அப்படத்தில் சிவகார்த்திகேயனை பார்த்து ‘துப்பாக்கியை புடிங்க’ என்று விஜய் வசனம் பேசியிருப்பார். அதற்கு சிவகார்த்திகேயன் ‘நீங்கள் இத விட முக்கியமான வேலையா போறீங்க நான் இத பார்த்துக்கிறேன்’ என பதில் கூறுவார். இந்த வசனம் மூலம் நடிகர் விஜய்க்குப் பின் சிவகார்த்திகேயன் என சமூக வலைதளங்களில் பெரும் ரசிகர்கள் பேசி வந்தனர். தற்போது இதனை குறிப்பிடும் விதமாக மறைமுகமாக சிவகார்த்திகேயன் பேசியுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x