Published : 04 Oct 2024 04:32 PM
Last Updated : 04 Oct 2024 04:32 PM

“நான் நலம் பெற வாழ்த்திய அனைவருக்கும் நன்றி” - ரஜினிகாந்த் நெகிழ்ச்சி

சென்னை: “நான் சீக்கிரம் உடல் நலம் பெற என்னை வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்” என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: “நான் மருத்துவமனையில் இருக்கும்போது, நான் சீக்கிரம் உடல் நலம் பெற என்னை வாழ்த்திய அனைத்து அரசியல் நண்பர்களுக்கும், திரைப்பட துறையை சார்ந்தவர்களுக்கும், எனது அன்பு நண்பர்களுக்கும், நல விரும்பிகளுக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். நான் நலம் பெற பிரார்த்தனை செய்த மனதார வாழ்த்திய, என் மீது அளவில்லா அன்பு வைத்திருக்கும் என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகர்களுக்கும், அனைத்து மக்களுக்கும் எனது உளமார மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

மேலும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அமிதாப் பச்சன் என ஒவ்வொருவருக்கும் தனது எக்ஸ் தள பக்கத்தில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். ரத்தக் குழாயில் வீக்கம் இருந்ததால் நடிகர் ரஜினிகாந்த் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை இல்லாமல், இடையீட்டு சிகிச்சை மூலம் அதனை சரி செய்ய திட்டமிடப்பட்டு ‘ஸ்டென்ட்’ கருவியை பொருத்தப்பட்டது. சிகிச்சை முடிந்து நடிகர் ரஜினிகாந்த் வீடு இன்று திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x