Published : 09 Sep 2024 07:11 PM
Last Updated : 09 Sep 2024 07:11 PM

‘இளம் இயக்குநர்களின் கதவு’ டில்லி பாபு - தமிழ்த் திரையுலகம் புகழஞ்சலி

மறைந்த தயாரிப்பாளர் டில்லி பாபு.

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரான டில்லி பாபு காலமானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள திரையுலகினர், “புதுமுக, இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்தவர் டில்லி பாபு” என புகழாரம் சூட்டியுள்ளனர்.

தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு: “தயாரிப்பாளர் டில்லி பாபுவின் மரணம் திரையுலகத்துக்கு பேரிழப்பு. ஏராளமான புதுமுக மற்றும் இளம் இயக்குநர்களுக்கும் திறமையான கலைஞர்களுக்கும் வாய்ப்பளித்தவர். அவரது குடும்பத்துக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்.”.

இசையமைப்பாளர் ஜிப்ரான்: “பெருங்கனவுகளை உள்ளடக்கிய பரந்த பார்வையும் கொண்டவர். அதனை சாத்தியப்படுத்துவதற்கு கடும் உழைப்பை செலுத்தியவர். அவரது மறைவு திரையுலகத்துக்கு பேரிழப்பு.”

இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவணன்: “டில்லிபாபு சார் மரகத நாணயம் திரைப்படத்தின் மூலம் எனக்கு ஒரு வாழ்க்கையை கொடுத்தவர்.ஒரு நல்ல மனிதரை.. ஒரு நல்ல தயாரிப்பாளரை.. ஒரு சாதனையாளரை..தமிழ் திரையுலகம் இழந்து விட்டது..மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.”

நடிகர் ஆதி: “மிகுந்த கனத்த இதயத்துடன் உங்களுக்கு பிரியா விடை கொடுக்கிறோம் டில்லி பாபு சார். வெகு சீக்கிரத்தில் சென்று விட்டீர்கள். எப்போதும் அன்பாகவும், ஆதரவாகவும், ஊக்கமளிப்பவராகவும் இருந்ததற்கு நன்றி. நீங்கள் மறைந்தாலும் சினிமா மீதான உங்கள் காதல் என்னென்றும் வாழும்.”

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்: “தயாரிப்பாளர் டில்லி பாபு மறைந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. சிறந்த மனிதர். நல்ல தயாரிப்பாளர். சந்தேகமில்லாமல் திரையுலகத்துக்கு இது ஒரு பேரிழப்பு.”

நடிகர் அசோக் செல்வன்: “டில்லி பாபு மறைவு பேரதிர்ச்சி அளிக்கிறது. திரையுலகத்துக்கான உங்களின் பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும். எனக்கு தனிப்பட்ட முறையில் ‘ஓ மை கடவுளே’ திரைப்படம் மூலம் என்றென்றும் நினைவில் இருப்பீர்கள்.”

இயக்குநர் சுசீந்திரன்: “நிறைய புதுமுக இயக்குநர்களை அறிமுகப்படுத்தியுள்ளார். அவரின் மறைவு புதுமுக இயக்குநர்களுக்கு பேரிழப்பு. மிகவும் எளிமையான, தன்மையான மனிதர். அவரது குடும்பத்துக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.”

தயாரிப்பாளர் டில்லி பாபு மறைவு: தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக வலம் வரும் நிறுவனம் ஆக்சிஸ் ஃபிலிம் பேக்டரி. இதன் நிறுவனர் ஜி.டில்லி பாபு (50). கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் சிகிச்சை எடுத்து வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று (செப்.9) அதிகாலை காலமானார். இவருடைய மறைவு திரையுலக பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தி இருக்கிறது. திரையுலகினர் பலரும் இவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

2015-ம் ஆண்டு ‘உறுமீன்’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் டில்லி பாபு. அதனைத் தொடர்ந்து ’மரகத நாணயம்’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘ராட்சசன்’, ‘ஓ மை கடவுளே’, ‘பேச்சிலர்’, ‘மிரள்’ மற்றும் ‘கள்வன்’ உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். இதில் ‘மரகத நாணயம்’, ‘ராட்சசன்’, ‘ஓ மை கடவுளே’ மற்றும் ‘பேச்சிலர்’ ஆகிய படங்கள் மாபெரும் வரவேற்பினை பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதும் தொடர்ச்சியாக படங்கள் தயாரிப்பதற்கு பல்வேறு இளம் இயக்குநர்களுக்கு முன் தொகை கொடுத்து ஒப்பந்தம் செய்திருந்தார். தனது மகனை நாயகனாக்க வேண்டும் என்பது இவருடைய கனவு. ’வளையம்’ என்ற பெயரில் தனது மகன் தேவ் நடிக்க ஒரு படத்தினை தயாரித்து வந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x