Published : 24 Aug 2024 02:52 PM
Last Updated : 24 Aug 2024 02:52 PM

“எங்களிடம் ஒரு மாரி செல்வராஜ் இருக்கிறார் என மார்தட்டி சொல்வேன்” - பாரதிராஜா நெகிழ்ச்சி

சென்னை: “படத்தைப் பார்த்து பல இடங்களில் கண்ணீர் விட்டேன். ஒப்பனைகள் இல்லாத முகம், சுத்தமில்லாத தெருக்கள், என அச்சு பிசகாமல் நம் கிராமங்களை கண் முன் கொண்டு வந்திருக்கிறார். எங்களிடம் ஒரு மாரி செல்வராஜ் இருக்கிறார் என மார்தட்டி சொல்வேன்.” என ‘வாழை’ படம் குறித்தும் அதன் இயக்குநர் மாரி செல்வராஜ் குறித்தும் இயக்குநர் பாரதிராஜா நெகிழ்ச்சி பொங்க பேசியுள்ளார்.

இது தொடர்பான அவரது வாழ்த்து செய்தியில், “சினிமா துறைக்கு வந்ததே புண்ணியம் என சில படங்களைப் பார்த்து யோசித்தது உண்டு. ‘வாழை’ அப்படியொரு படம். படத்தை பார்த்து பல இடங்களில் கண்ணீர் விட்டேன். ஒப்பனைகள் இல்லாத முகம், சுத்தமில்லாத தெருக்கள், என அச்சு பிசகாமல் நம் கிராமங்களை கண் முன் கொண்டு வந்திருக்கிறார். மண்ணிலிருந்து மக்களை எடுத்து நடிக்க வைத்திருக்கிறார். மாரி, நமக்கு கிடைச்ச பெரிய பொக்கிஷம்.

சத்யஜித் ரே, ஷியாம் பெனெகல், படங்களைப் பார்க்கையில் பொறாமையாக இருக்கும். அப்படியான படங்களை எடுக்க தமிழனுக்கு தகுதி இல்லையா என ஆதங்கப்படுவேன். ஆனால், இவர்களையெல்லாம் விஞ்சுகிற வகையில், என் நண்பன், என் மாரி செல்வராஜ் அற்புதமாக படத்தை எடுத்திருக்கிறார். எங்களிடம் ஒரு மாரி செல்வராஜ் இருக்கிறார் என மார்தட்டி சொல்வேன்” என பாராட்டியுள்ளார். இதனை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள மாரி செல்வராஜ், “நிறைய தருணங்கள் என்னை பற்றியான உங்கள் சொற்களில் நின்று இளைப்பாறி இருக்கிறேன். இன்று நானே ஒரு செடியாய் துளிர்க்கிறேன். இயக்குநர் இமயத்திற்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x