Published : 19 Aug 2024 03:49 PM
Last Updated : 19 Aug 2024 03:49 PM

‘வாடிவாசல்’ பட பணிகள் தொடங்கியுள்ளன - தயாரிப்பாளர் தாணு அப்டேட் 

சென்னை: “கடந்த மாதம் நானும், வெற்றிமாறனும், சூர்யாவும் இணைந்து பேசினோம். படத்துக்கான வேலைகள் தொடங்கியுள்ளன. இதற்காக மதுரையில் அலுவலகம் போடப்பட்டிருக்கிறது” என ‘வாடிவாசல்’ படம் குறித்து தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார்.

இயக்குநர் வெற்றிமாறனின் பன்னாட்டு திரை பண்பாடு ஆய்வகத்தின் 3-வது ஆண்டு தொடக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய இயக்குநர் வெற்றிமாறன், “என் கதைகளை நான் சொல்வதற்கான சூழல் இல்லாமல் போய்விடும் என யாரும் உணரக்கூடாது. அவரவர் கதையை அவரவர் சொல்வதற்கான சூழலை உருவாக்கி கொடுப்பது தான் இந்த ஐஐஎஃப்சி. ஊடக கதையாடல் என்பது வெறும் சினிமா மட்டுமல்ல. ரீல்ஸ், ஷார்ட்ஸ், எக்ஸ் தளத்தில் எழுதும் பதிவு கூட சமூகத்தில் நிகழ்த்தும் கதையாடல் தான்.

திரை ஆளுமை ஆவது மட்டுமே நோக்கமாக கொண்டிருக்க கூடாது. பல்வேறு தளங்களில் உங்களின் கதைகளை சொல்ல வேண்டும். அதற்கான துணிவை ஏற்படுத்துவது தான் இலக்கு. எனக்கும் இந்த கல்வி கிடைத்திருந்தால் இன்னும் சினிமாவை சிறப்பாக எடுத்தியிருப்பேன். இந்த ஐஐஎஃப்சி தொடங்கும்போது இருந்த வெற்றி துரைசாமி இன்று இல்லை. அவரது நினைவாக ‘wild life photography’ போட்டி நடத்தி அவரது பெயரில் விருது கொடுக்க உள்ளோம்” என்றார்.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் தாணுவிடம் ‘வாடி வாசல்’ படம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “கடந்த மாதம் நானும், வெற்றிமாறனும், சூர்யாவும் இணைந்து பேசினோம். படத்துக்கான வேலைகள் தொடங்கியுள்ளன. இதற்காக மதுரையில் அலுவலகம் போடப்பட்டிருக்கிறது. 3 நாட்கள் படப்பிடிப்பு எடுத்தோம். அதிலிருக்கும் ஆபத்தை உணர்ந்தோம். லண்டனில் ஜுராசிக் பார்க் படத்தை எடுத்த உறுதுணையாக இருந்த கலைஞர் ஒருவரிடம் பேசியுள்ளோம். அதற்காக தான் காலதாமதம் ஆகிறது. எந்த தடங்களும் இல்லை” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x